ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை.. இயக்குனர் பாரதிராஜா இரங்கல்!
சென்னை: பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணனின் மறைவை ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார், இயக்குனர் பாரதிராஜா.
பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 69. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் கண்ணன். இந்நிலையில் அவர் மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையில் பெரும்பகுதியை கழித்த, என் துணைவியாரை காட்டிலும் நான் அதிகமாக நேசித்த மிகப்பெரிய ஒளிப்பதிவு கலைஞன் பி.கண்ணன். உங்களுக்குத் தெரியும், நான் படப்பிடிப்புக்கு கேமராக்களை எடுத்துச் செல்வதில்லை, என் கண்களின் இரண்டு கண்களை எடுத்துச் செல்கிறேன் என்று. அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்கத் தெரியும் என்று சொல்லி இருக்கிறேன்.
நாற்பதாண்டு காலம் அவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை, அவரது மறைவை.
இந்த கொரோனாவின் பிடியில் சிக்கி அவரது உடலை நேரில் தரிசிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். ஓர் அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, திரையுலகம் இழந்துவிட்டது. நீங்கள் பார்திருப்பீர்கள், என்னுயிர் தோழன், குடிசை பகுதி பின்னணி, அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும், நாடோடி தென்றல் பீரியட் பிலிம் அதற்கு எப்படி ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்கிற வித்தைகளை எல்லாம் தெளிவாக தெரிந்து வைத்திருந்த கலைஞன்.
இப்போது அவர் இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எனக்கு கிடைத்த புகழின் பெரும்பங்கு, கண்ணனைத் தான் சேரும். அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











