பாக்யராஜை ஹீரோவாக்கும்போது பைத்தியமான்னு கேட்டாங்க... பாரதிராஜா பிளாஷ்பேக்
சென்னை: பாக்யராஜை ஹீரோவாக நடிக்க வைத்த போது பைத்தியமா? என்று என்னைக் கேட்டார்கள் என்று இயக்குனர் பாரதிராஜா சொன்னார்.
டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் நடித்து, இயக்கி இருக்கும் படம் 'பச்சை விளக்கு'. புதுமுகங்கள் தீசா, தாரா, ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, வேதம் புதிது தேவேந்திரன் இசையமைத்திருக்கிறார்.
இதன் இசை வெளியீட்டு விழா பாரதிராஜா திரைப்படக்கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவில் மொரிஷியஸ் நாட்டின் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் பாக்யராஜ், மதுரா பாலன் மலேசிய எழுத்தாளர் நெல்லையப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பொதுநல கருத்து
விழாவில், இயக்குனர் பாரதிராஜா பேசும்போது, இந்தப் படம் அரசாங்கம் எடுக்க வேண்டிய படம். பொதுநல கருத்துள்ள படம். மேலும் படத்தில் கமர்சியலும் இருக்கிறது. இன்று நிறைய பேர் பயணத்தில் பச்சை விளக்கை மதிப்பதில்லை. பச்சை விளக்கு போடுமுன் போனால் நாம் போய்ச்சேர்ந்திடுவோம் என்று தெரிவதில்லை.

நிதானம் தவறினால்
நிதானம் இங்கு மிக முக்கியம். நிதானம் தவறினால் வாழ்க்கை ஒரு நொடியில் போய்விடும். நிதானமாக சென்றால் நீண்ட நாள் வாழலாம். நீண்ட வருடங்கள் இருக்கலாம். அப்படி ஒரு அழகான படத்தை இயக்கியிருக்கிறார், மாறன்.

ஹீரோவாக்கினேன்
பாக்யராஜ் என்னிடம் உதவி இயக்குனராக இருந்தபோது, வசனம் சொல்லிக் கொடுப்பதை கவனிப்பேன். வித்தியாசமாகச் சொல்லிக் கொடுப்பான். அவனையே நடிக்க வைக்கலாம் என்று தோன்றியது. கண்ணாடியை மாட்டி அவனை ஹீரோவாக்கினேன்.

விதை போட்டேன்
அவனை ஹீரோவாக்கிய போது, சிலர் எனக்கு பைத்தியம் பிடித்ததா? என்று கேட்டார்கள். என் கண்ணில் அவன் கதாநாயகனாக தெரிகிறான் என்றேன். பிறகு அவன் வளர்ந்தது வேறு. நான் விதை போட்டேன். அவ்வளவு தான். ஆனால், விதை போடுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும்
அதே போல, டாக்டர் மாறன் ஹீரோவாக வேண்டும் என்று துணிந்து நடித்திருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது. டாக்டர் மாறனின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.

இளையராஜா
இளையராஜாவுக்கும் எனக்கும் சில நேராமல் ஆகாமல் இருக்கும். இருந்தாலும் இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா ஒருவர் மட்டுமே. ராஜாவுக்கு அடுத்து நான் ரொம்ப ரசித்தது, தேவேந்திரன் இசையை. ஆனால், அவன் ஏன் பெருசா வரவில்லை என்று தெரியவில்லை' என்றார்.
விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் படக்குழுவினர் பேசினர்.


Click it and Unblock the Notifications











