வந்து குவிந்த ரசிகர்கள்.. தொடங்கியது எஸ்.பி.பி இறுதிச் சடங்கு.. பாரதிராஜா, அமீர் இறுதி அஞ்சலி!
சென்னை: மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு தொடங்கியுள்ளது.
Recommended Video
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74.
பாடும் நிலா பாலு என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் அவருடைய மரணம் சினிமா துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பண்ணை வீடு
அவர் உடல் காம்தார் நகரில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நேற்று வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

போலீஸ் பாதுகாப்பு
அங்கு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக அவர் வீட்டு முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்று போலீசார் தெரிவித்திருந்தது. ஆனாலும் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்ததால், வரிசையில் சென்று இறுதி அஞ்சலி செலுத்த ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

கண்ணீர் விட்ட மனோ
இதனால் ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். திரையுலகினரும் அவர் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இயக்குனர் பாரதிராஜா, அமீர், இசை அமைப்பாளர்கள் தினா, தேவிஶ்ரீ பிரசாத், பாடகர் மனோ உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பாடகர் மனோ அவர் உடலைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறினார். அவரை இசை அமைப்பாளர் தினா அமைதிப்படுத்தினார்.

இறுதிச் சடங்கு
தொடர்ந்து ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கிய பின்னர் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது.

கொரோனா அறிகுறி
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று முன் தினம் அவர் உடல் நிலை மோசமானது. நேற்று காலமானார்.


Click it and Unblock the Notifications











