படப்பிடிப்புக்கு அனுமதி… மீண்டும் உயிர் பெற்றது போல் உள்ளது… பாரதி ராஜா முதல்வருக்கு நன்றி !
சென்னை : சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தந்த முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு இயக்குனர் பாரதிராஜா நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவின் 2வது அலை மிகவும் தீவிரமாக பரவியதை அடுத்து கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பேருந்து சேவை, கடைகள், திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிறுத்தப்பட்டன.
கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததை அடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று குறைந்த மாவட்டங்களில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

நன்றி கடிதம்
இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா,படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததற்காக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், மக்கள் தேவைகளறிந்து செயலாற்றுவதே சிறந்த அரசின் பணியாகும். அந்தவகையில் இந்த ஆட்சியானது தாய்ப்பறவை போல செயல்படத் தொடங்கியிருப்பதை அறிந்து மகிழ்கிறோம்.

அரசியல் செயல்பாடுகளை ரசிக்கிறோம்
நம் மண்ணின் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சலுகைகள், கொரோனா காலகட்டத்திலும் தீவிர செயலாற்றி அதன் எண்ணிக்கையை உதிர்த்தது, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் முனைப்பெடுக்கும் இந்த அரசின் செயல்பாடுகளை மிகவே ரசிக்கிறோம்.

தளர்வுகள் அறிவிப்பு
சீரிய வேகத்தில் செயலாற்றும் முதல்வருக்கும் துறைசார்ந்த அரசு இயந்திரத்திற்கும் எம் நன்றிகள். கட்டுப்படுத்தப்பட்ட இக்கொரோனா காலகட்டத்திலிருந்து மக்கள் இயல்பை நோக்கித் திரும்ப கவனமாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரும் வேளையில் திரைத்துறையும் மீள தளர்வுகள் அறிவித்தமைக்கு நன்றிகள்.

படப்பிடிப்புக்கு அனுமதி
முடங்கிக் கிடந்து திரையரங்குகள் இல்லாமல் தவிக்கும் எம் படங்கள் ஒருபுறம்... பாதி படப்பிடிப்பை முடித்து மீதி முடிக்க காத்திருக்கும் படங்கள் ஒருபுறம்... என பத்துமாதம் சுமக்க வேண்டிய குழந்தையை இரண்டு வருடங்கள் சுமந்தது போன்ற வலி மறுபுறம் என இருந்த நிலைக்கு உங்கள் அறிவிப்பு பெருமலர்ச்சியைத் தந்திருக்கிறது. படப்பிடிப்பை நடத்திக்கொள்ளத் தந்த அனுமதி எங்களுக்கு மீண்டும் உயிர் பெற்றது போல உள்ளது.

திறக்க உதவுவீர்
மேலும் இயல்பு நிலை திரும்பும் தருணத்தில் தாங்கள் திரையரங்குகளையும் திறந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் தயாரிப்பாளர்களும் வழிகாட்டல் நடைமுறையைப் பின்பற்றி கொரோனா நோய்த் தொற்றை முறியடிக்கும் விதமாக தயாரிப்புப் பணிகளில் ஈடுபடுவோம் என உறுதியளிக்கிறோம் என்று பாரதிராஜா அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











