தமிழகத்தில் திறக்கப்பட்ட திரையரங்குகள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் பாரதிராஜா நன்றி!
சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா நன்றி கூறிள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே திரையரங்குகள் சரிவர திறக்கப்படவில்லை. கொரோனா முதல் அலைக்கு பிறகு இடையில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது.

ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே கொரோனோ இரண்டாவது அலை அச்சுறுத்தலை தொடர்ந்து திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று ஓய்ந்துள்ளதால் இன்று முதல் மீண்டும் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனை தொடந்ரது தமிழகத்தில் இன்று பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநரும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவருமான பாரதிராஜா நன்றி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளை திரையுலகின் கருப்பு நாட்களாக்கி விட்டது இந்த கொரானா. படப்பிடிப்பு, புதிய திரைப்படங்கள் வெளியீடு என எல்லாம் பெருமளவில் முடங்கிவிட்டது.
நிச்சயமற்ற எதிர்காலத்தில் நம்பிக்கை பூக்குமா என்ற கேள்விக் குறியோடு நகர்ந்த நாட்களில் இப்போது திரையரங்குகளை 23.8.2021 முதல் 50% இருக்கைகளோடு திறந்துகொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் விதைக்கிறது.
ஆக்கிரமித்திருக்கும் நோய் விலகி, பல புதிய திரைப்படங்கள் வெளியாகி, திரையரங்குகள் முழுமையான திருவிழாக் கோலம் காண காத்திருக்கிறோம்.
திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளகள் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்த ஒரு அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்திரு. மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











