Blue sattai: சென்னையில் கிளிசரின் வியாபாரம் அதிகரிப்பு.. நடிகர்களை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் ஏராளமானோர் நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினர். ஏராளமான ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சென்னை தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள், தொண்டர்கள் வழிநெடுகிலும் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, விஜயகாந்த்துடன் படங்களில் நடித்திருந்த சூர்யா உள்ளிட்ட சிலர் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாதபடி வெளிநாடுகளில் சூட்டிங்கில் இருந்ததால் வீடியோ மூலம் வருத்தத்தை பகிர்ந்தனர். நடிகர் அஜித், விஜயகாந்த் குடும்பத்தினருக்கு தொலைப்பேசி மூலம் ஆறுதல் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுகுறித்து சினிமா விமர்சகரும், இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர்களை ட்ரோல் செய்து வருகிறார்.

விஜயகாந்த் மறைவு: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த், கடந்த வாரம் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தன்னடைய 71வது வயதில் காலமானார். விஜயகாந்தின் மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. விஜயகாந்தின் மறைவையொட்டி முதல்வர் முக ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டு பின்பு சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டது.
வெளிநாட்டில் இருந்த நடிகர்கள்: இதையடுத்து தீவுத்திடலில் இருந்து அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் சூட்டிங்கில் இருந்ததால், விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் சிக்கியதாக வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்துள்ள அவர்கள் ஒவ்வொருவராக விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்றைய தினம் கார்த்தி வந்த நிலையில் இன்றைய தினம் நடிகர் சூர்யா விஜயகாந்த் சமாதியில் மரியாதை செலுத்தினார்.

விஜயகாந்த் சமாதியில் சூர்யா மரியாதை: விஜயகாந்தின் சமாதியில் இன்றைய தினம் மரியாதை செலுத்திய சூர்யா, அண்ணனை போல யாரும் கிடையாது என்று கண்ணீருடன் பேட்டி கொடுத்தார். விஜயகாந்துடன் சூர்யா பெரியண்ணா என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார். சூர்யாவின் துவக்க காலத்தில் இந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. முன்னதாக விஜயகாந்தின் மறைவின்போது ஓடும் காரில் இருந்தபடி இரங்கல் வீடியோவை வெளியிட்டிருந்தார் சூர்யா. அவரது இந்த வீடியோ மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. வெளிநாட்டில் இருந்து வர முடியல்லை என்றாலும் ஓடும் காரிலிருந்தபடி இரங்கல் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழும்பியது.
சூர்யாவிற்கு ஊட்டி விட்ட விஜயகாந்த்: இந்நிலையில் இன்றைய தினம் விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா, விஜயகாந்தின் முகத்தை இறுதியாக பார்க்க முடியாதது ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார். தான் அசைவம் சாப்பிடாமல் இருந்த சூழலில், தனக்கு நடிக்க தெம்பு வேண்டும் என்று தன்னுடைய தட்டிலிருந்து அசைவ உணவை எடுத்து தனக்கு ஊட்டி விட்டதையும் சூர்யா கண்ணீருடன் நினைவு கூர்ந்தார். இந்நிலையில் சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தற்போது விஜயகாந்தின் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருவது குறித்து சினிமா விமர்சகரும் இயக்குநருமான ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வருகிறார்.
ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்: சூர்யாவின் கண்ணீர் புகைப்படத்தையும் கிளிசரின் புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், சென்னை மருந்துக்கடைகளில் கிளிசரின் வியாபாரம் அதிகரிப்பு என்று ட்ரோல் செய்துள்ளார். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக வெளிநாடுகளில் முகாமிட்டுள்ள நடிகர், நடிகைகள் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வராமல் இருந்ததை முன்னதாக சுட்டிக் காட்டியிருந்த ப்ளூ சட்டை மாறன், தற்போது கொண்டாட்டங்கள் முடிந்து ஒவ்வொருவராக விஜயகாந்த் சமாதிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: விஜயகாந்த் காலமானதையடுத்து பல நடிகர்கள், நடிகைகள் கூட்டத்தை பொருட்படுத்தாமல் நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் அஜித், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், விக்ரம், வடிவேலு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் இந்த துக்கத்தில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து தொடர்ந்து விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன், அவரோட மறைவுக்கு நேரில் வராமல் தற்போது சமாதியில் வந்து சாவகாசமாக நடிகர்கள் பர்பார்ம் செய்வதாக குற்றம் சாட்டியிருந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு இவர்கள் சாவகாசமா சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல தற்போது நடந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











