Rajinikanth: காலில் விழுந்த நாளில் இருந்து படவசூலும் விழுந்தது.. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது ஜெயிலர் படம்.
இந்தப் படத்தின் வசூல் 500 கோடி ரூபாய்களை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. தமிழகத்தில் மட்டும் 130 கோடி ரூபாய்களை படத்தின் வசூல் தாண்டியுள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தன்னுடைய இமயமலை பயணத்தை மேற்கொண்ட ரஜினிகாந்த், பல தலைவர்களை சந்தித்துள்ளார்.

ரஜினி விவகாரத்தால் சரிந்த ஜெயிலர் வசூல்?: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சுனில், தமன்னா, ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 10ம் தேதி ரிலீசான படம் ஜெயிலர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். கடந்த பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், இந்தப் படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டி அவர் உழைத்த நிலையில், அதில் வெற்றி பெற்றுள்ளார். இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். படத்தின் வசூல் 500 கோடி ரூபாய்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் இந்தப் படம் வசூல் சாதனை செய்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீசின்போது நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இருந்து படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னதாக படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற அவர், படம் குறித்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் சொன்ன குட்டிக் கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆனால் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே அவர் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். தன்னுடைய படங்களின் ரிலீசின்போது அவர் இந்த பயணத்தை மேற்கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா மற்றும் உடல்நிலை பிரச்சினை காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் இந்தப் பயணத்தின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இதனிடையே உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த், அவரது காலில் விழுந்த நிகழ்வு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ஜெயிலர் படத்தின் வசூலும் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் கொடுத்த பேட்டியில், மரியாதை நிமித்தமாகவே யோகி ஆதித்யநாத்தை சந்தித்ததாகவும் வயது குறைவாக இருந்தாலும் யோகி, சன்னியாசி காலில் விழுந்து வணங்குவது தனது வழக்கம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்கிய தமிழக மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஜினிகாந்தின் இந்த செயல் குறித்து இயக்குநரும் சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் செய்துள்ளார். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்ததில் இருந்து ஜெயிலர் படத்தின் வசூலும் விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளரை காலி செய்ய ரஜினியே போதும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











