Blue Sattai Maran: தொடர்ந்து கெட்ட வார்த்தையில் பேசும் மிஷ்கின்.. சுட்டிக் காட்டிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: இயக்குநர் மிஷ்கின் தற்போது பிசாசு 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். தன்னுடைய சகோரதர் இயக்கத்தில் உருவாகிவரும் படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இதுமட்டுமில்லாமல் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இயக்குநர் மிஷ்கின் குறித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இயக்குநர் மிஷ்கின் பிசாசு, துப்பறிவாளன் என அடுத்தடுத்தப் படங்களை இயக்கி தன்னை தமிழில் முன்னணி இயக்குநராக வெளிப்படுத்திக் கொண்டவர். இவரது கதைகள் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகின்றன. தற்போது ஆன்ட்ரியா, விஜய் சேதுபதி கூட்டணியில் பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தன்னுடைய சகோதரர் ஆதித்யா இயக்கிவரும் புதிய படத்தில் மிஷ்கின் இசையமைப்பாளராகவும் இணைந்துள்ளார். டெவில் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மொத்தம் 4 பாடல்களை மிஷ்கின் உருவாக்கியுள்ளார். விதார்த், பூர்ணா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் முக்கியமான கேமியோ கேரக்டரில் மிஷ்கினும் நடித்துள்ளார். இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் காட்டிவந்த மிஷ்கின் தற்போது இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
இயக்கத்தில் மட்டுமில்லாமல் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கவும் செய்கிறார் மிஷ்கின். சமீபத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, யோகிபாபு கூட்டணியில் வெளியான மாவீரன் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார் மிஷ்கின். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக எஸ் தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி லீட் கேரக்டரில் நடிக்கும் படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னுடைய மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருகிறார் மிஷ்கின். பொது நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் இவர், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருவர் குறித்த கமெண்ட்களை வெளிப்படையாக கூறிவருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தை பெரியவர் சொல்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று பேசியிருந்தார். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இவர் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவரது சமீபத்திய மேடை பேச்சில் நடிகர் விஷால் குறித்த கமெண்ட்களை பதிவு செய்திருந்தார். விஷால் மற்றும் மிஷ்கின் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், விஷால் மிகவும் இனிமையானவர் என்று மிஷ்கின் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். விஷாலின் படங்கள் வெற்றி பெற தான் தொடர்ந்து பிரார்த்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். உடனடியாக விஷாலுக்கு தான் ஐஸ் வைப்பதாக பேச்சுக்கள் எழும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இனிமேல் சத்தியமாக தான் விஷாலுடன் படம் செய்ய மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய பேச்சின் இடையில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்திய மிஷ்கின், பட வாய்ப்பிற்காக கெஞ்சுவது உள்ளிட்ட விஷயங்களை தான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து விஷாலுடன் தான் பணிபுரிந்த நேரங்கள் மிகவும் இனிமையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன், மிஷ்கின் போன்றவர்கள் கெட்ட வார்த்தைகளை பேசியும் இவருக்கு எந்த பத்திரிகையாளரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்வதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், கூல் சுரேஷ் போன்ற சிறிய ஆட்கள், ஆடியோ லான்ச் போன்ற நிகழ்வுகளில் தவறாக பேசும்போது உடனடியாக கண்டனங்கள் எழுவதாகவும் ஏன் இந்த பாகுபாடு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











