Blue Sattai Maran: தலைகனம் இல்லாத ரஹ்மான்.. தேவா.. மீண்டும் வம்பிழுக்க களமிறங்கிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் மிகச்சிறப்பான ஆளுமைகளாக இசையமைப்பாளர் தேவா மற்றும் ஏஆர் ரஹ்மான் காணப்படுகின்றனர்.
குறிப்பாக இசையமைப்பாளர் தேவா ரஜினி, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார். ஏஆர் ரஹ்மானின் பயணம் தமிழில் ரோஜா படத்தில் துவங்கியது. தற்போது வரை 30 ஆண்டுகளை கடந்து இந்திய அளவில் மட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் தொடர்ந்து வருகிறது.

தலைகனம் இல்லாத இசையமைப்பாளர்கள் என ஏஆர் ரஹ்மான், தேவாவிற்கு ப்ளூ சட்டை மாறன் பாராட்டு: தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக தேனிசைத் தென்றல் தேவா காணப்படுகிறார். ரஜினி, கமல், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார். பல கானா பாடல்களை ரசிகர்களுக்கு தந்துள்ள தேவா, கானா பாடல்களை தானே எழுதியும் அந்தப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட தேவா, சமீப காலங்களில் இசையமைப்பில் கவனம் செலுத்துவதில்லை.
மாறாக பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடுவதை தற்போது வழக்கமாக்கியுள்ளார். அப்படி சமீபத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் அவர் மாமன்னன் படத்தில் சிறப்பான நெஞ்சமே நெஞ்சமே பாடலை பாடியுள்ளார். எப்போதுமே அதிரடியான கானா பாடல்களை பாடி பெயர் பெற்றுள்ள தேவாவின் குரலசைவில் இந்தப் பாடல் மெலடியாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. யுகபாரதி வரிகளில் இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏஆர் ரஹ்மான். படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்ற நிலையில், அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. சினிமா ரசிகர்களை மட்டுமில்லாமல் ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரையும் இந்தப் படம் கவர்ந்துள்ள நிலையில், பாடல்களும் படத்தின் பலத்திற்கு உறுதுணையாக அமைந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் மென்மையான நெஞ்சமே நெஞ்சமே பாடலை தன்னிடம் கொடுத்துவிட்டு ஏஆர் ரஹ்மான், பாடிப்பாருங்க சார், உங்க குரலுக்கு நல்லா இருக்கும் என்று கூறியதாக தேவா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது பேட்டியொன்றில் பேசியுள்ள தேவா, குத்துப்பாடல், கானா பாடல் என்று பாடும் தன்னிடம் இந்த மெலடி பாடலை கொடுத்துவிட்டு, தனது குரலுக்கு நல்லா செட் ஆகும் என்று ஏஆர் ரஹ்மான் கூறியதாகவும் அவரது இந்தத் தேடல்தான் அவரது வெற்றிக்கு காரணம் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெம் என்று கூறப்படும் வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர் தம்பி ஏஆர் ரஹ்மான் என்றும் சிலாகித்துள்ளார் தேவா.

இதனிடையே இந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கார்டாக பகிர்ந்துள்ள சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், தலைக்கனம் இல்லாத தேவாவும் ரஹ்மானும் இணைவதில் மகிழ்ச்சி என்றும் நடக்க வேண்டும் அடிக்கடி இப்படியான நிகழ்ச்சி என்றும் டிஆர் பாணியில் கேப்ஷன் வெளியிட்டுள்ளார். தேவாவும் ரஹ்மானும் தலைகனம் இல்லாதவர்கள் என்றால் அப்போது தலைகனம் உள்ளவர் என்று யாரை ப்ளூ சட்டை மாறன் குறிப்பிடுகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











