Cool Suresh: கூல் சுரேஷுக்கே விபூதி அடித்த மஞ்சள் வீரன் இயக்குநர்.. அப்ப யாருதான் ஹீரோ?
சென்னை: தமிழ் சினிமா உலகில் கடந்த சில மாதங்களாகவே கவனம் பெற்ற நபர்களாக மாறியவர்களில் டிடிஎஃப் வாசனும் இயக்குநர் செல்-அம் ஆகியோர் உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து மஞ்சள் வீரன் படத்தினை எடுக்க பூஜைகள் எல்லாம் போட்டார்கள். ஆனால், படத்தினைத் தொடங்குவதற்கு முன்னரே படத்தில் இருந்து டிடிஎஃப் வாசனை முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் நீக்கிவிட்டார் என டிடிஎஃப் வாசன் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால், இயக்குநர் செல் அம் தரப்பில் டிடிஎஃப் வாசன் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறி படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் படத்தின் கதாநாயகனாக நடிகர் கூல் சுரேஷ் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியானது. இப்படியான நிலையில் இயக்குநர் செல் அம் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது டிடிஎஃப் வாசனை வைத்து திரு.வி.க. பூங்கா படத்தினை இயக்கிய இயக்குநர் செல்அம் படம் இயக்கப்போவதாக அறிவித்தார். மேலும் அந்தப் படத்திற்கு மஞ்சள் வீரன் எனப் பெயர் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சள் வீரன் படத்தின் போஸ்டர் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மஞ்சள் வீரன் படத்தின் வேலைகள் நடந்து வருவதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர், மஞ்சள் வீரன் படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிப்பார் என்றார். ஆனால் எதற்காக நீக்கப்படுகிறார் என்பதற்கான காரணத்தை சொல்லவில்லை. இவரது இந்த அறிவிப்பு பலருக்கு அதிர்ச்சி அளித்தது.

இது தொடர்பாக பேசிய டி.டி.எஃப்.வாசன், இயக்குநர் செல்அம், தன்னை படத்தில் இருந்து நீக்கியதே தனக்கு தெரியாது. இதுபற்றி அவர் ஒரு முறை கூட என்னிடம் பேசவே இல்லை. அதுமட்டுமில்லாமல், அவர் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று சொல்லி இருந்தார். ஆனால், மஞ்சள் வீரன் படத்தின் போட்டோஷூட் மட்டுமே நடந்தது. நான் செலவு செய்த பணத்தில் எனக்கு ஒரு பைசாக்கூட வேண்டாம். ஆனால், எதற்காக என்னை படத்தில் இருந்து நீக்கினார் என்ற காரணத்தை மட்டும் சொன்னால் போதும் எனக் கூறினார்.

கூல் சுரேஷ்: இந்தப் பிரச்னைகள் நடந்து கொண்டு இருந்தபோது இயக்குநர் செல் அம் மற்றும் கூல் சுரேஷ் இணைந்து வெளியிட்ட வீடியோவில் மஞ்சள் வீரன் படத்தின் அடுத்த கதாநாயகன் கூல் சுரேஷ் என சொல்லாமல் சொன்னதாக தகவல்கள் வெளியானது. அதிலும் குறிப்பாக கூல் சுரேஷ் பேசியதை எல்லாம் வைத்துப் பார்க்கையில், கூல் சுரேஷ்தான் மஞ்சள் வீரன் படத்தின் அடுத்த கதாநாயகன் என்ற முடிவுக்கு பலரும் வந்துவிட்டார்கள்.

செல்அம்: இப்படியான நிலையில் இயக்குநர் செல் அம் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதில் அவர் பேசியுள்ளதாவது, மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனை அக்டோபர் மாதத்தில் அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவித்தோம். ஆனால் அப்படி இருக்கும்போது, வானிலை காரணமாக இந்த அறிவிப்பை வெளியிடமுடியவில்லை. எனவே விரைவில் அதாவது நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகனையும் ஃபர்ஸ்ட் லுக்கையும் அறிமுகம் செய்து வைக்கவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
குழப்பம்: இயக்குநர் செல் அம் இவ்வாறு பேசியுள்ளது, கூல் சுரேஷ் ரசிகர்கள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மஞ்சள் வீரன் படத்தின் நாயகன் கூல் சுரேஷ் இல்லையா எனவும், அப்படியானால் கூல் சுரேஷ்க்கும் இயக்குநர் செல்லம் விபூதி அடித்துவிட்டாரா எனவும் கேள்விகளை இணையத்தில் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











