Thangalaan: தங்கலானை கொண்டாட ரஞ்சித்தின் சாதியாக இருக்கனும்னு அவசியமில்லை.. புகழாரம் பாடிய சேரன்!
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரும் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் இந்தியிலும் படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
படத்தின் வெற்றியை படக்குழு கோலாகலமாக கொண்டாடி வருகின்றது. ஏற்னவே தங்கலான் படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்த தங்கலான் படம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினர். இந்நிலையில் படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அதேநேரத்தில் படம் ஹிந்தியில் ரிலீஸ் ஆகி அங்கேயும் நல்ல வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் தங்கலான் படத்தைப் பார்த்த இயக்குநர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் படத்தையும் படக்குழுவையும் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில் பல விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம். அதில், ”நேற்றுதான் தங்கலான் பார்க்க நேர்ந்தது. பா. ரஞ்சித், விக்ரம் என இருவரின் அசுர உழைப்பும் அளவிடமுடியா திரை ஆற்றலும் காண முடிந்தது.. ரஞ்சித் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர். கதை சொன்ன விதமும் காட்சிபடுத்திய விதமும் அசரவைத்தது.. முதல்பாதி முழுவதும் ஆங்கிலப்படமாகவே இருந்தது.
விக்ரம்: மண்ணின் உரிமையை இவ்வளவு சிறப்பாக எந்த படமும் சொல்லவில்லை.. மொழியாடலில் இருந்த பழமை இன்னும் அழகு சேர்த்தது.. விக்ரம் நம் தலைமுறை கொண்டாட வேண்டிய நபர்.. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் அவரை அர்ப்பணித்திருந்த விதம்.. சொல்ல வார்த்தைகள் இல்லை.. இணை என எவரைத்தேடினும் கிடைக்கவில்லை.
இரைச்சல் இல்லாத இசை: தம்பி ஜி.வி. பிரகாஷ்குமார் பெருமைப்படத்தக்க இசையால் இரைச்சலின்றி காட்சிகளை வியக்கவைத்ததை ரசித்தேன். திரைப்படத்தில் குறைகள் இருப்பினும் ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடை மனதில் கொள்ளாமல் (எனக்கில்லை) படைப்பு பேசிய அரசியலை கொண்டாடியேஆகவேண்டும் அதுவே நாம் இந்த சினிமாவில் இருப்பதை அர்த்தமாக்கும்
சேது: இரவுக்காட்சி முடிந்து நேரம் 1 மணி ஆனாலும் என் தொலைபேசியில் ரஞ்சித்தின் எண்ணை அழுத்தினேன்.. ஒருவரின் உழைப்பை பாராட்ட நேரமும் காலமும் காரணங்களும் பார்த்தால் அது பொய் என்பதால். சேதுவின் போதும் இரவுக்காட்சி பார்த்து நானும் பாலாவும் விகரமும் அதிகாலை 4 மணிவரை பேசியது நினைவு வந்தது.
சாதி: அரசியல் நிலைப்பாடு, கொள்கைகளை கடந்து சினிமாவை நேசிக்க அதை படைத்த மனிதனின் சாதியை கணக்கில் கொள்ளாமல் படைப்பின் உன்னதத்தை உணர்ந்து கொண்டாட சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்.. அது எவராயினும்.. ஏனெனில் படைப்பாளிகளின் நோக்கம் வென்று சமூகம் சமமாகும்போது நீயும் நானும் கைகோர்த்தே ஆகவேண்டும்” என குறிப்பிட்டு ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டியுள்ளார். இதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











