தம்பி ராமையா மகனை இயக்கும் சேரன்.. ஜூலை 13ம் தேதி ஷூட்டிங் ஆரம்பம்
இயக்குனர் சேரனின் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் ஹீரோவாக நடிக்கிறார்.
சென்னை: தம்பி ராமையா மகன் உமாபதியை நாயகனாக்கி புதிய படமொன்றை இயக்க இருக்கிறார் சேரன்.
இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையாளராக வலம் வருபவர் சேரன். கடந்த 1997ம் ஆண்டு தமிழ் சினிமாவில் 'பாரதி கண்ணம்மா' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சேரன்.

அதையடுத்து இவர் இயக்கிய 'வெற்றி கொடி கட்டு', 'பாண்டவர் பூமி' போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் 'சொல்ல மறந்த கதை', 'ஆட்டோகிராப்' போன்ற படங்களில் தானே ஹீரோவாக நடித்தார்.
அதன் தொடர்ச்சியாக திருட்டு விசிடிக்களை ஒழிக்கும் முயற்சியாக 'சி2எச்3 என்ற நிறுவனத்தை தொடங்கினார் சேரன். இதன் மூலம் ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை எடுத்து, சி.டி.க்களாக அதை விநியோகித்தார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் புதுமுக இயக்குனர் சாய் ராஜ்குமார் இயக்கத்தில் 'ராஜாவுக்கு செக்' என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீசாக உள்ள நிலையில், மீண்டும் இயக்கத்திற்கு திரும்புகிறார்.
தம்பி ராமையாவின் மகன் உமாபதியை வைத்து புதிய படம் ஒன்றை சேரன் இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 13ம் தேதி முதல் தொடங்க உள்ளது. 'மணியார் குடும்பம்' இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் இதனை அறிவித்தார்.
கோயம்புத்தூரில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தில் உமாபதி ரேடியோ ஜாக்கியாக நடிக்கிறார். தம்பி ராமையா, உமாபதி, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











