டேனியல் பாலாஜி மறைவு.. சினிமா அவரை சரியாக பயன்படுத்தல.. சேரன் வேதனை!
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் குறித்து பலரும் நெகிழ்ந்து வரும் நிலையில் இயக்குநர் சேரன், அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற பெரிய கனவோட பெரிய ஆர்வத்தோட இருந்தவர் டேனியல் பாலாஜி, அவரை சினிமா சரியாக பயன்படுத்தல என்றார்.
மறைந்த டேனியல் பாலாவின் உடல் கொட்டிவாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கௌதம் மேனன், அமீர், வெற்றிமாறன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேற்று இரவு ஓடிவந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் டேனியல் பாலாஜி கண்கள் ஏற்கனவே தானம் செய்யப்பட்டதை அடுத்து அவரது கண்கள் எடுக்கப்பட்டு தற்போது அவரது உடல் அவரது புரசைவாக்கம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் முரளியின் தம்பியான டேனியல் பாலாஜிக்கு நடிகர் அதர்வா தனது அம்மாவுடன் வந்து அஞ்சலி செலுத்தினார். அதே போல விஜய்சேதுபதி, அஞ்சலி செலுத்தினார்.

குடும்பத்திற்கு பேரிழப்பு: இந்நிலையில் டேனியல் பாலாஜி குறித்து பேசிய இயக்குநர் சேரன், டேனியல் பாலாஜியின் மறைவு அவரது குடும்பத்திற்கு பேரிழப்பு, அவரது குடும்பம் ஒரு சொந்தத்தை இழந்து இருக்கு, நம்பிக்கையை இழந்து இருக்கு அவரது குடும்பத்திற்கு முதலில் எனது ஆறுதல். ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அதை சரியாக செய்யக்கூடிய நல்ல நடிகர். அவருடன் ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்த போது அவருடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னிடம் மிகவும் மரியாதையுடனே பேசினார். அவர் முரளியின் தம்பி என்பதால் இதற்கு முன்பாகவே அவரை எனக்கு தெரியும்.
நல்ல கதாபாத்திரம்: சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற பெரிய கனவோட பெரிய ஆர்வத்தோட இருந்தவர் டேனியல் பாலாஜி, அவருக்கு சரியான தீணி கிடைக்கவில்லை. கௌதம் மேனன் படத்தில் மட்டும் தான் அவருக்கு தீணிப்போடும் திரைப்படமாக அமைந்தது. நல்ல கதாபாத்திரத்தை ஏற்று நடந்தும் கலைஞன் உயிரோடு இருக்கும் போதே அவனுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்து அவர் உயரத்திற்கு வரும் போது தான், அவன் நிறைவை அடைவான். இப்போது டேனியல் பாலாஜியின் ஆத்மா முழுமையாக நிறைவடையாகாமல் தான் சென்று இருப்பார்.
தன்னைத்தானே செதுக்கிக்கொண்டவர்: அவர் மனதிற்குள் பெரும் பெரும் கனவுகள் இருந்தது, அவர் நடிக்கும் போதே, அண்ணா எதுக்கு இந்த சீன், ஏன் இந்த ரியாக்ஷன் என்று கேட்டுக்கொண்டே இருப்பார். எல்லாத்தையும் கேட்டு பண்ணும் நடிகன் தான் தன்னைத் தானே செதுக்கிக் கொள்கிறான் என்று அர்த்தம். அப்படி தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவன் தான் டேனியல் பாலாஜி. என்னமோ அவரது வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிட்டது. ஆனால் அவரின் கதாபாத்திரம் என்றும் நிலைத்து இருக்கும் என்று இயக்குநர் சேரன் வருத்தத்துடன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











