Cheran Father Pandian: இயக்குநர் சேரன் தந்தை பாண்டியன் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் அஞ்சலி
சென்னை: இயக்குநர் சேரனின் தந்தை பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றி கொடிகட்டு, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சேரன் சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடித்து ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல நல்ல படங்களையும் கொடுத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

கிராமத்து கதைகளை ஆழமாகவும் அழுத்தமாகவும் சொல்லி வந்த சேரன் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சேரன் தந்தை காலமானார்: சினிமா ஆப்பரேட்டராக பணியாற்றி வந்த சேரனின் தந்தை எஸ். பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 16) அதிகாலை 6.30 மணியளவில் காலமானார். சொந்த ஊரான மதுரை மாவட்டத்தில் உள்ள பழையூர்பட்டியில் வாழ்ந்து வந்த சேரனின் தந்தை சொந்த ஊரிலேயே உயிரிழந்த நிலையில், இன்று மாலை அங்கேயே இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவமாய் தவமிருந்து: சேரன் இயக்கி நடித்த தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரணை அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருப்பார் சேரன். அம்மா தான் பாசம் காட்டுவார் என படங்கள் வெளியாகி வந்த சூழலில் ஒரு அப்பாவின் பாசம் அதை விட பெரிதாக இருக்கும் என்பதை காட்டியிருந்தார். இந்நிலையில், சேரனின் அப்பாவின் மரணம் அவரை நிலை குலைய செய்துள்ளது.
பிரபலங்கள் அஞ்சலி: சேரனின் தந்தை பாண்டியனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல்களையும் அஞ்சலியையும் அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். கடைசியாக சேரன் நடிப்பில் வெளியான தமிழ்க்குடிமகன் படத்தில் அவர் ஈம சடங்குகள் செய்யும் நபராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் சேரன்.


Click it and Unblock the Notifications











