எருமையை வச்சு இப்படியா.. அவர பார்த்தா ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்.. வீடியோவால் இம்ப்ரஸ் ஆன சேரன்!
சென்னை: எருமை மாட்டின் வரையப்பட்டுள்ள ஓவியத்தை பார்த்த இயக்குநர் சேரன் அந்த ஓவியரை பாராட்டியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் சேரன். ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்த இவர், பல தேசிய விருதுகளையும் குவித்துள்ளார்.
கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

நல்லப் பெயர்
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் நேர்மையாக அவர் நடந்து கொண்ட விதம் மக்கள் மத்தியில் நல்லப் பெயரை பெற்றுக் கொடுத்தது. மேலும் சேரப்பா என்ற புதிய பெயரையும் வாங்கிக் கொடுத்தது.

தோளில் பூக்கள்
இந்நிலையில் இயக்குநர் சேரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் எருமை மாடு ஒன்றின் மீது அவ்வளவு அழகாக ஓவியம் வரையப்பட்டுள்ளது. மாட்டின் கால்களை மனிதனின் கால்களாக்கி மனிதர் ஒருவர் தோளில் பூக்களை சுமந்து செல்வதாக உள்ளது அந்த ஓவியம்.

மனிதனே நடப்பது போல்
மாட்டின் முன்பக்கம் மற்றும் பின் பக்கத்தில் மஞ்சள் சிவப்பு நிற காம்பினேஷனில் அசத்தலாக உள்ளது அந்த ஓவியம். மாடு நடக்க நடக்க மனிதனே நடப்பது போன்று உள்ளது அந்த ஓவியம். இந்த ஓவியம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்கள் வைரலாகி வந்தது.

கட்டிப்பிடிக்கனும்
இந்நிலையில் அந்த எருமையின் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள இயக்குநர் சேரன், மிகவும் ரசித்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த கிரியேட்டர் எங்க இருக்கார்னு கண்டுபிடிச்சு கொரோனா முடிஞ்சதும் ஒரு தடவை கட்டிப்பிடிக்கனும்... என்ன கற்பனை.. என்ன யூகம்.. அழகு.. என்றும் புகழ்ந்திருக்கிறார்.

ரசனைக்குரியதா?
அதனை பார்த்த நெட்டிசன்கள் சிலர் அவரோடு சேர்ந்து பாராட்டியிருந்தாலும், பலர் மாட்டின் மீது இப்படி பெயிண்ட் அடித்து அதனை கொடுமைப் படுத்தியிருக்கிறார்கள் இது பாராட்ட வேண்டிய விஷயமா? ரசனைக்குரியதா? மிருக வதை என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாவம் எருமை
மற்றொரு நெட்டிசனான இவர் பாவம் அந்த எருமை மாடு. இந்த பெயிண்ட் காரணமாக தோலில் தடிப்பும் சில உடல் உபாதைகளையும் எதிர் கொள்ள வேண்டி வரும் சார்.. இதை வேறு மாதிரி பாராட்டுங்கள் ஐயா....நல்லது.. என குறிப்பிட்டார்.

அசைவை ரசித்தேன்
இதனை பார்த்த சேரன், நானும் அதை உணர்ந்தேன்.. அந்த அசைவை அந்த ஓவியத்தில் பொருத்திப்பார்த்த தன்மையை தான் ரசித்து போட்டேன் அய்யா.. என பதில் தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











