#21YearsOfAutograph: மீண்டும் ஒரு காதல் பயணம்....காதலர்களின் பொக்கிஷமாய் வந்த சேரனின் ஆட்டோகிராப்!
சென்னை: இயக்குநர் சேரன் நடிப்பில் உருவான ஆட்டோகிராஃப் திரைப்படம் வெளியாகி 21 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அதுகுறித்த பசுமையான நினைவுகளை இந்த கட்டுரையில் காணலாம். காதல் என்றால் என்னவென்ற தெரியாத வயதில் அரும்பு மீசை முளைக்காத குறும்புத்தனங்களோடு, கிராமத்தின் கடைகோடி பகுதியில் வாழ்ந்த காலம் அது. பள்ளிக்கூடத்தில் அ, ஆ, இ,ஈ கூட எழுத தெரியாமல் டீச்சரின் ஒவ்வொரு கொட்டுக்கும் ஒரு வார்த்தைகள் மனதில் பதிகின்றன. வீட்டில் டி.வி வாங்கி படம் பார்க்கும் அளவிற்கு வசதி இல்லை.
இதயங்களை கரைய வைத்த ஒவ்வொரு பூக்கள்:ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பஞ்சாயத்து தொலைக்காட்சி இருக்கும். அப்படி எங்கள் ஊரிலும் பஞ்சாயத்து தொலைக்காட்சி இருக்கும் இடத்தில் வெள்ளிக்கிழமை என்றால் ஊருக்கே திருவிழாதான். புது படத்தில் இடம்பிடிக்கும் பாடலை பார்ப்பதற்காகவே நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு பார்க்க மக்கள் கூடுவர். முதல் இடத்தை பிடிப்பதற்கே அலைமோதிய காலத்தை பசுமை மாறாமல் இன்றும் நெஞ்சில் நிழலாடுகிறது. அப்படி, ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஆட்டோகிராப் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலை பார்த்து கண்ணீர் விட்டு கரைந்து போன இதயங்கள் ஏராளம். பள்ளிக்கூட பாட கணக்குகளை காட்டிலும் மனதில் ஆழமாய் பதிந்த பாடல் என்றால் இதுதான்.

சித்திரம் வரைந்த சேரன்: மக்களின் ரசனையை மனதிற்கு நெருக்கமாய் சித்திரம் வரைந்தவர் இயக்குநர் சேரன். இப்படம் வெளியான காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காதல் தோல்வி இருப்பதை அறிந்துகொண்ட வயதும் அதுதான். காதல் என்றால் பெண்ணின் கைகளை பிடிப்பதும், முத்தமிடுவதும், ஏங்கி தவிப்பதும் மட்டும் அல்ல, கண்ணீருக்கும் இதயம் இருக்கிறது. இயக்குநர் சேரனின் சொந்த வாழ்வில் நடந்த அனுபவங்களை கற்பனையை தூவி ஒரு அழகான உரையாடல்களை நிகழ்த்தியுள்ளார்.
முன்னணி கதாநாயகர்கள் பலரும் கதை கேட்டு ரிஸ்க் எடுக்க பயந்த திரைக்கதை தான் ஆட்டோகிராப். பல நடிகர்கள் தட்டி கழிக்கவே இப்படத்தை இயக்குநர் சேரனே தயாரித்து நடித்து படமும் வெளியாகிறது. திரையிட்ட இடங்களில் எல்லாம் மக்களின் கண்ணீரும், பெருங்கதைகளும் விமர்சனங்களாக புத்தகங்களில் வெளியாகின்றன. இத்தனை நாள் தங்களது மனதிற்குள் பூட்டி மறைத்து வைத்திருந்த காதல் நினைவுகளுக்கு கை கால்கள் முளைக்க தொடங்கின. கவிதைகளாகவும், காதல் கடிதங்களாகவும், சேரனின் வீட்டிற்கு பல லட்சம் கடிதங்கள் குவிகின்றன.
மறக்க முடியாத நினைவுகள்: ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடல் தொடங்கி, நட்பு, காதல், பால்ய வயதின் நினைவுகள் என மனிதர்களின் உணர்ச்சிகளை தட்டியெழுப்பி மக்கள் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தது. ஆட்டோகிராப் படத்திற்கு தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருதுகள் குவிகின்றன. படம் வெளியாகி மக்களின் நாடி, நரம்புகளின் கதையாகி போனது. இது என் வாழ்வில் நடந்தது போன்று உள்ளது என சிலாகிக்க தொடங்கினர். கதை கேட்டு புறக்கணித்த நடிகர்கள் இப்படத்தில் நடிக்காமல் விட்டுவிட்டோமே என புலம்பி தவிக்கும் அளவிற்கு ஆட்டோகிராஃப் திரைப்படம் புதிய தடத்தை பதிவு செய்தது.
காதலும், தீராத வலிகளும்: படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் மீண்டும் பால்ய கால காதல், முதல் காதல் தோல்வி என இசையை போல் தொடர்ந்துகொண்டே இருக்கும். தமிழ் சினிமாவில் காதல் படங்களை பொருத்தவரை ஆட்டோகிராப் சாயலில் ஒரு காட்சியாவது இடம்பெறாமல் இருப்பதில்லை. மனிதர்களின் மென்மையான உணர்வுகளை மிக எதார்த்தமாய், நேர்த்தியாகவும் படைத்திருப்பார் இயக்குநர் சேரன். குத்து பாடல், வைப் என்று சுற்றி வந்தாலும், கடைசியில் ஆழமான சிந்தனை என்றால் ஆட்டோகிராஃப் இல்லாத வாழ்க்கை என்பதை ஆத்மார்த்தமாய் உணர்த்திய ஒரு படைப்பு தான் இது. இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்களின் நினைவின் தடமாய் பதிந்து கிடக்கும்.


Click it and Unblock the Notifications











