சாத்தான்குளம் விவகாரம்..அரசும் சட்டமும் மக்களுக்காகத்தான்..நீதியரசர்களுக்கு இயக்குனர் சேரன் நன்றி
சென்னை: கொரோனா காலம் என்றும் பார்க்காமல் அதிரடி கைதுகளை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் நீதியரசர்களுக்கும் நன்றிகள் என்று இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடங்கியது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், விசாரணையை நடத்தி வருகிறார்.

முதல் தகவல் அறிக்கை
இவ்வழக்கு விசாரணையை தமிழக அரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ வழக்கை கையில் எடுக்கும்வரை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் ஜூன் 30-ம் தேதி விசாரணையை தொடங்கினர். போலீசார் ஏற்கனவே பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டு, இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கை
இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த இன்ஸ்பெக்டர் ஶ்ரீதர் இன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், சிபிசிஐடி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

நீதியரசர்களுக்கு
இது தொடர்பாக இயக்குநர் சேரனும் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: அரசும் சட்டமும் மக்களுக்கான பாதுகாப்புக்காகத்தான். கொரோனா காலம் என்றும் பார்க்காமல் களம் இறங்கி பத்து குழுக்களாக இயங்கி அதிரடி கைதுகளை நடத்தும் சிபிசிஐடி அதிகாரிகளுக்கும் நீதித்துறையில் நேர்மையுடன் இயங்கும் அனைத்து நீதியரசர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

அமைதியான வாழ்வு
விசாரணைகளும் அதற்கான தீர்ப்பும் அரசும், அரசு அதிகாரிகளும் சட்டத்துறையும் மக்களுக்கான நலம் காக்கவே இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கும்படி இருக்கவேண்டும். காவல்துறை மீது மக்களுக்கு இருக்கும் அச்சத்தைப் போக்கும் படியாகவும் அமையவேண்டும். அமைதியான வாழ்வுக்கு வழிவகுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











