வருமானத்தை விட உயிர்தானே முக்கியம்.. வேறு வாய்ப்பு கிடைக்காது: முதல்வருக்கு பிரபல இயக்குநர் கோரிக்கை
சென்னை: மதுக்கடைகள் திறக்கப்படுவது தொடர்பாக இயக்குநர் சேரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் தமிழத்தில் சென்னை, கடலூர், அரியலுர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தமிழக அரசு அறிவிப்பு
இந்நிலையில் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி அதாவது நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதேநேரத்தில் சென்னையில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சில நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பு அதிர்ச்சி
ஏற்கனவே ஊரடங்கால் மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். பல இடங்களில் தீயை போல் வேகமாக பரவி வருகிறது கொரோன வைரஸ். இந்நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதாக அறிவித்தது மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

சேரன் வேண்டுகோள்
மது விற்பனையால் கொரோனா தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா இயக்குநரான சேரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் ஒன்றறை விடுத்திருக்கிறார்.

உயிர் தானே முக்கியம்
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், நிரந்தர மதுவிலக்கு அறிவிப்பீர்கள் என எதிர்பார்த்தேன் அய்யா.. இதைவிட மதுவிலக்கு அமுல்படுத்த வேறு வாய்ப்பு கிடைக்காது. மீண்டும் உங்கள் ஆட்சி உருவாக்க இது ஒரு பெரும் ஆயுதமாக மாறியிருக்கும். அரசிற்கான வருமானம் என்பதைவிட பெரும்பாலான மக்களின் உயிர்காப்பதல்லவா முக்கியம்.. என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











