'எஸ்டிஆர் 48' வில்லனா ஹீரோவா? காட்டு பசில இருக்கும் பேன்ஸ்.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள சிம்பு 48 திரைப்படம் குறித்து தரமான அப்டேட்டை வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படம் தரமான கம்பேக் படமாக அமைந்தது. உடல் எடை, ஷுட்டிங்கிற்கு ஒழுங்காக வருவதில்லை என்ற காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தை தொடர்ந்து, கெளதம் மேனனுடன் சிம்பு கூட்டணியில் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிம்பு கேங்ஸ்டாராக அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

நடிகர் சிம்பு: தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வருகிறார். இப்படங்களின் வெற்றிக்கு பிறகு உலக நாயகன் கமல் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். சிம்புவின் 48வது படமான இப்படத்தின் அறிவிப்பே பிரம்மாண்டமாக வெளியானது. நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ஷுட்டிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ரஜினிக்கு சொன்ன கதை: கமல்ஹாசனின் தயாரிப்பில் சிம்புவின் 48வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். துல்கர் சல்மான், ரீது வர்மாவை வைத்து இவர் இயக்கிய இத்திரைப்படம் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி, ரஜினிக்கு கதை சொன்னதாக கூறப்படுகிறது. இந்த கதையில் ரஜினியால் நடிக்க முடியாமல் போனதை தொடர்ந்து சிம்பு தற்போது இந்த கதையில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கமல்ஹாசன் போட்ட ஆர்டர்: மேலும், கதைக்கு தேவையான வகையில் நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேவைப்பட்டால் மட்டும், மற்ற மொழி நடிகர்களை நடிக்க வைக்க வேண்டும் எனவும் பட இயக்குநருக்கு கமல் ஆர்டர் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இயக்குநர் சற்று அதிருப்தி அடைந்தாலும், கதாபாத்திரத்தை சரியான தேர்வு செய்யும் பணியில் முனைப்புடன் இருக்கிறார்.
வில்லன் மற்றும் ஹீரோ: இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன், யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிம்புவின் 48வது படம் குறித்து பேசி உள்ளார். அதில், இப்படம் பாகுபலி படம் போல முழுக்க முழுக்க ஒரு ஹிஸ்டாரிக்கல் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதில் இரண்டுவிதமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். ஒரு கதாபாத்திரம் முரட்டுத்தனமான வில்லன், மற்றொரு கதாபாத்திரம் ஸ்மார்ட்டான ஹீரோ என இந்த இரண்டு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
பிப்ரவரியில் படப்பிடிப்பு: இந்த இரண்டு கதாபாத்திரத்தில் ஒன்று உடல் எடை கூடி இருப்பது போலவும் மற்றொரு கேரக்டரில் உடல் எடை குறைந்து இருக்க வேண்டும் என்பதால், முதலில் ஒல்லியான கதாபாத்திரத்தை எடுத்து முடித்து விட்டு, சில மாதத்திற்கு பிறகு குண்டான கேரக்டரின் படப்பிடிப்பை தொடங்கும் திட்டத்தை படக்குழு வைத்து இருக்கிறது. மேலும், போர் சண்டைக்கான பயிற்சியில் சிம்பு ஈடுபட்டு வருகிறார். ஆனால், பிப்ரவரி மாதம் சிம்பு 48 படத்தின் படப்பிடிப்பு நிச்சயம் தொடங்கி விடும்.


Click it and Unblock the Notifications











