அதுதான் வேதனையாக இருந்தது.. நடிகை ஜோதிகா ஏன் அப்படி பேசினார்? இயக்குனர் இரா.சரவணன் விளக்கம்!
சென்னை: நடிகை ஜோதிகா ஏன் அப்படி பேசினார் என்று இயக்குனர் இரா. சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
நடிகை ஜோதிகா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. ஒரு முறை அங்கு ஷூட்டிங் சென்றபோது கண்டிப்பாக பாருங்கள் என்றார்கள்.
அப்போது எனக்கு அங்குள்ள மருத்துவமனையில் ஷூட்டிங். அங்கு சென்றபோது அது சரியாக பராமரிக்கப்பட்டாமல் இருந்ததைப் பார்த்தேன்.

எதிர் கருத்து
கோயில்களுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யும் தொகையை பள்ளிகளுக்கும் மருத்துவ மனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி, சேனல் ஒன்றில் சமீபத்தில் ஒளிபரப்பானது. இதையடுத்து நெட்டிசன்கள், அதை வெளியிட்டு, அவர் தஞ்சை பெரிய கோவிலை அவமானப்படுத்தி விட்டதாக விளாசினர். எஸ்.வி.சேகர் போன்றோரும் அவருக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இரா.சரவணன்
இந்நிலையில் கத்துக்குட்டி படத்தின் இயக்குனரும், இப்போது ஜோதிகா நடிக்கும் படத்தை இயக்கி வருபவருமான இரா.சரவணன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப் பதாவது: சசிகுமார் - ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா.

செட் போடாமல்
தஞ்சை மக்களின் வாழ்க்கை குறித்த கதை என்பதால் எதையுமே செட் போடாமல் லைவ்வாக எடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். அதனால் மருத்துவமனையில் முறையான அனுமதி பெற்று நோயாளிகள் இல்லாத பகுதியாகப் பார்த்து ஷூட் செய்தோம்.
ஜோதிகா வந்தார். மருத்துவமனையின் மற்ற பகுதிகளையும் போய்ப் பார்த்தார். பிறந்த குழந்தையைக்கூட உரிய இடம் ஒதுக்கிக் கவனிக்க முடியாமல் மக்கள் படும் சிரமங்களை வருத்தமுடன் நோக்கினார்.

வியப்பு வேதனை
பிறந்த வடு மாறாத குழந்தையோடு ஒரு தாய் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து இருந்ததைக் கண்டு கலங்கினார். வரலாற்று அடையாளமாக உலகு சிறக்க உயர்ந்து நிற்கும் தஞ்சை பெரிய கோயிலுக்கு எதிரில் இப்படி அடிப்படை வசதிகள்கூட இல்லாத மருத்துவமனையா? என்பதுதான் அவருடைய வியப்பாகவும் வேதனையாகவும் இருந்தது. அதனால்தான் கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகளும் இருக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

எங்கே வந்தது பிழை?
ஆயிரம் அன்னசத்திரங்கள், பதினாயிரம் ஆலயங்கள் கட்டுவதைவிட ஓர் ஏழைக்குக் கல்வி கற்பிப்பது புண்ணியமானது எனச் சொன்ன மகாகவி பாரதியின் பெண்ணுருவாய் நின்றுதானே ஜோதிகா பேசி இருக்கிறார். இதில் எங்கே வந்தது பிழை? கோயிலுக்கு நிகராக மருத்துவமனைகள் எனச் சொல்வது எப்படி கோயிலுக்கு எதிரானதாக அமையும்? சில வருடங்களுக்கு முன்னர் 'கோயில் கட்டுவதை விட கழிவறைகள் கட்டுவதுதான் முக்கியம்' எனப் பேசினார் பிரதமர் மோடி.

சொல்ல முடியுமா?
அதற்காக அவர் கோயில்களை அவமானப்படுத்தி விட்டார் எனச் சொல்ல முடியுமா? ஜோதிகாவுக்கு பெரிய கோயில் எவ்வளவு விருப்பமானது என்பதும் அவர் அந்தக் கோயிலை எந்தளவுக்கு மதிப்பார் என்பதும் எங்கள் யூனிட்டுக்கே நன்றாகத் தெரியும். தன் பிள்ளைகளுக்கு பெரிய கோயிலின் நினைவுச் சின்னங்களை அன்புப் பரிசாக வாங்கிச் சென்றவர் அவர். இந்தப் பரபரப்புப் பின்னணியில் என் பங்கும் இருப்பதால் தான் இந்த விளக்கம்.

உச்சி வெயில்
அரசு மருத்துவமனை பக்கம் வந்தால் நோய்த்தொற்று வந்துவிடும் என்றெண்ணி அதை செட் போட்டு எடுத்துவிட்டுப் போயிருக்கலாம். 'எங்கள் மக்களுக்காகத்தான் படம். எங்கள் மக்களைப் பாருங்கள். அவர்களின் சூழலில் வாழுங்கள்' எனச் சொல்லிச் சொல்லிப் படம் எடுக்கிறேன்.
விவசாய மக்களோடு உச்சி வெயிலில் களைகொத்த வயற்காட்டில் இறங்கச் சொன்னேன். ஒரு வார்த்தை மறுப்பு சொல்லாமல் வயலில் இறங்கிக் களை கொத்தினார் ஜோதிகா.

கூழ்க் குடித்தார்
கால்கள் சுட்டுப் பொசுக்க, காட்டிக் கொள்ளாமலே சமாளித்தார். ஆரத்தி சுற்றிய பெண்களோடு அளவளாவினார். பனை மட்டையில் கூழ்க் குடிக்கும் பக்குவம் கற்றார். ஒப்பாரிப் பெண்கள் மத்தியில் உட்கார்ந்து அழுதார். தூண்டில் வீரன் கோயிலில் மாவிளக்குப் போட்டுக் கும்பிட்டார். நடுக்குளத்தில் இறங்கி கோரை அறுத்தார். தஞ்சை மக்களின் வாழ்வியலை அறிய, அப்படியே வாழ அவர் கற்றுக் கொண்டார்.

பாசமா இருக்காங்க
தஞ்சைக்கே உரிய வாஞ்சை கலந்த வார்த்தைகளைப் பேசக் கற்றார். இந்த சிரமங்களை எல்லாம் படாமலே அவர் இந்தப் படத்தில் நல்லபடி நடித்திருக்க முடியும். 'சரவணன் சார், தஞ்சாவூர் மக்களை எனக்கு அவ்வளவு பிடிக்குது. ரொம்பப் பாசமா இருக்காங்க' எனச் சிலிர்த்த அவருடைய நல் மனதுதான் மருத்துவமனைகளையும், பள்ளிக் கூடங்களையும் பற்றி அவரைப் பேச வைத்தது.

மனசாட்சியற்றது
இந்தப் பேரன்புக்கு இவ்வளவு பின்னணிகள் கற்பிப்பது நியாயமில்லை. அதிலும் குறிப்பாக இந்தக் கொரோனா நேரத்தில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் இக்கட்டான சூழலில் இத்தகைய சர்ச்சைகளைக் கிளப்புவது கொஞ்சமும் மனசாட்சியற்றது' என்று அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











