'வரமாட்டேங்கறாங்க... ' - ஹீரோயின் மீது இயக்குநர் புகார்
சென்னை: படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள், விழாக்கள் என எதற்குக் கூப்பிட்டாலும் ஹனி ரோஸ் வர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் சலங்கை துரை புகார் கொடுத்துள்ளார்.
கரண் நடித்த 'காத்தவராயன்' படத்தை இயக்கியவர் சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து 'காந்தர்வன்' படத்தை இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது இந்தப் படம்.
இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார்
இந்தப் புகார் குறித்து சலங்கை துரை கூறுகையில், "சிறு பட்ஜெட் படங்களை எடுத்து ரிலீஸ் செய்வது பெரிய சவாலாக உள்ளது. இந்த படங்களை வாங்கி வெளியிட பெரிய கம்பெனிகள் முன்வருவது இல்லை. விநியோகஸ்தர்களும் இல்லை என்ற நிலைமையே இருக்கிறது. படத்தை பார்ப்பதற்கு கூட யாரும் தயாராக இல்லை. இதனால் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. அவற்றை வெளியீட்டு சிறுபட தயாரிப்பாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஹனிரோஸ்
காந்தர்வன் படத்தை விளம்பர படுத்துவதற்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்படி நாயகி ஹனிரோஸை அழைத்தோம். அவர் வரவில்லை. போனில் தொடர்பு கொண்டாலும் பேசுவது இல்லை. பாடல் வெளியீட்டு விழாவையும் புறக்கணித்து விட்டார்.

சம்பளம் வாங்கிட்டார்
அவர் வராததால் படத்தை விளம்பரப்படுத்தி மக்கள் முன் கொண்டு சேர்ப்பது எங்களுக்கு சவாலாக இருந்தது. சம்பளம் முழுவதையும் வாங்கிவிட்டு வர மறுக்கும் ஹனிரோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம்.

இதுவே பப்ளிசிட்டிதானே
காந்தர்வன் நல்ல படமாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கதிர் இப்படத்துக்கு பின் பெரிய நடிகராக வலம் வருவார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹீரோயின் விழாக்களுக்கு வராததை தயாரிப்பாளர் சங்கத்தில் புகாராக்கி அதையே பப்ளிசிட்டிக்கும் பயன்படுத்தி சலங்கை துரை புத்திசாலி இயக்குநர்தான்!


Click it and Unblock the Notifications











