Exclusive: திமிரு பிடிச்சவன் கதை என்னுடையதுதான்.. இயக்குநர் கணேசா மறுப்பு
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை திருட்டு புகாரை மறுத்துள்ளார் இயக்குநர் கணேசா.
Recommended Video

சென்னை: திமிரு புடிச்சவன் பட கதை என்னுடையதுதான். இதுதொடர்பாக எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறும் புகார் சரியல்ல என்று இயக்குநர் கணேசா கூறியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் கணேசா இயக்கியுள்ள படம் திமிரு புடிச்சவன். கடந்த வாரம் ரிலீசான இப்படத்தின் கதை சிறார் குற்றவாளிகளை உருவாக்குபவர்களைப் பற்றியது. இப்படத்தில் போலீஸாக நடித்துள்ளார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். அதில் அவர், 'இப்படத்தின் கதை தன்னுடைய ஒன் பிளஸ் ஒன் இஸ் ஜீரோ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது' எனக் குற்றம் சாட்டியிருந்தார். ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் வெளியான கதை இது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் புகார் தொடர்பாக திமிரு புடிச்சவன் பட இயக்குநர் கணேசா நம்மை தொடர்பு கொண்டு விளக்கம் அளித்தார். அப்போது அவர், "கதை என்னுடையது என மற்றவர்களின் படங்களுக்கு உரிமை கோரும் பிரச்சினை தற்போது தமிழ் சினிமாவில் பேஷனாகி விட்டது. நான் சுமார் 25 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். பல்வேறு கஷ்டங்களைத் தாண்டி இப்போது தான் 2வது படம் இயக்கி உள்ளேன். இப்போது வந்து இது என்னுடைய கதை என உரிமை கோருவது சரியல்ல. இப்படத்தின் கதை என்னுடையது தான் என்பதற்கு உரிய அனைத்து ஆதாரங்களையும் நான் வைத்திருக்கிறேன்.
நான் மதிக்கக்கூடிய எழுத்தாளர்களில் ஒருவர் ராஜேஷ் குமார். அவருடைய கதையை வைத்து நான் திமிரு புடிச்சவன் படத்தை எடுக்கவில்லை. நான் தெலுங்கில் ராஜமவுலியிடம் உதவியாளராக இருந்த போது, அவர் சிம்மாதிரி படம் எடுத்த காலத்தில் இந்த கதைக்கருவை பிடித்தேன். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் கழித்து தான் அது படமாகி இருக்கிறது. சர்ச்கைகளின் மூலம் கிடைக்கும் வெற்றி எனக்கு வேண்டாம். எனது வெற்றி நேர்மையானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மேலும் இது பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய சர்கார் படத்தின் கதை என்னுடையது என வருண் என்பவர் நீதிமன்றத்தை நாடினார். பின்னர் படத்தின் டைட்டிலில் பேர் போடுவதாக உறுதியளிக்கப்பட்டு இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்தப் பிரச்சினையில் வருண் தரப்பிற்கு ஆதரவாக இருந்ததாக சர்ச்சைகளில் சிக்கிய பாக்யராஜ் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். தன்னுடைய தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர் அப்பிரச்சினை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதை திருடப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











