அஜித்தை அறிமுகப்படுத்தியவர்.. பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்!
சென்னை: பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 250க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ். தமிழில் சிப்பிக்குள் முத்து, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் சேலஞ், லீடர், அபிலாஷா உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் நிறைய மேடை நாடகங்களிலும் கொல்லப்புடி மாருதி ராவ் நடித்து வந்தார்.
சென்னை தியாராய நகரில் உள்ள வீட்டில் தான் அவர் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மதியம் அவரது உயிர் பிரிந்தது.
கொல்லப்புடி மாருதி ராவின் மகன் கொல்லப்புடி சீனிவாஸ் ராவ் தான் அஜித்தின் முதல் படத்தை இயக்க ஆரம்பித்தவர். பிரேம புஸ்த்தகம் எனும் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்திருந்த நிலையில், சீனிவாஸ் ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார்.
இதையடுத்து, மகனுக்காக அந்த படத்தை இயக்கி முடித்து வெளியிட்டார் கொல்லப்புடி மாருதி ராவ். எனவே தல அஜித்தை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் எனும் பெருமை அவருக்கு உண்டு. மேலும் மறைந்த தனது மகனின் பேரில், சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு வருடம் தோறும் விருது வழங்கி வந்தார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











