காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்தேன்.. சாத்தான்குளம் சம்பவம்.. இயக்குநர் ஹரி வேதனை
சென்னை: நடிகர் சூர்யாவை தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஹரி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.
சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு, #JusticeForJeyarajAndBennicks என்ற ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என நடிகர் சூர்யா நேற்று இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹரி கண்டனம்
சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்த நிலையில், இருவரையும் காவல் அதிகாரிகள் அடித்து, துன்புறுத்தி கொன்றுள்ளனர் என பல பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை பிறப்பித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் ஹரி இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

இனி ஒரு சம்பவம் கூட
சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்குவதே.. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.

வேதனைப்படுகிறேன்
மேலும், காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன் என இயக்குநர் ஹரி மிகுந்த மன வருத்தத்துடன் இந்த அறிக்கையை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார். இயக்குநர் ஹரியின் இந்த கண்டனம், சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

5 படங்கள்
சாமி, சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, சாமி 2 என காவல்துறையை பெருமைப் படுத்தும் விதமாக விக்ரம் மற்றும் சூர்யாவை வைத்து 5 காப் ஸ்டோரி படங்களை இயக்கியவர் இயக்குநர் ஹரி. போலீஸ் அதிகாரிகளை சூப்பர் ஹீரோக்களாக தமிழ் சினிமாவில் மாற்றிக் காட்டிய பெருமைக்கு சொந்தக்காரரான இயக்குநர் ஹரி தற்போது, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











