போதும் சார் விட்டுடுங்க.. திரிஷா விவகாரத்தில் பார்த்திபனுக்கு வேண்டுகோள் வைக்கும் இயக்குநர்
சென்னை: விஜய்யுடன் திரிஷா ஜோடியாக வந்தது பல விவாதங்களை கிளப்பியது. திரைத்துறையிலிருந்தும் அவர்களுக்கு எதிராக குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. முக்கியமாக பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில் பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திரிஷாவும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதனையடுத்து தொடர்ச்சியாக இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார் பார்த்திபன். இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் இசக்கி வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.
விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக ஒரு திருமணத்துக்கு வந்தது குறித்து விருது விழா ஒன்றில் பேசிய பார்த்திபன், "குந்தவையை குந்த வையுங்கள்.. அதாவது இந்தக் குந்தவையை வெளியே வராமல் கொஞ்ச நாளுக்கு வீட்டுக்குள்ளேயே குந்த வைப்பது நல்லது. நிறைய பிரச்னைகளை உண்டாக்காமல் இருக்கலாம். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர்த்து கவிதை சொல்லாமல் இருப்பது பெட்டர் என்று நினைக்கிறேன்' என பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தொடர்பான வீடியோ இணையத்தில் சென்சேஷனல் ஆனது.

திரிஷா தெரிவித்த கண்டனம்: பார்த்திபன் அவ்வாறு பேசியது குறித்து திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில், "எனது பெயரையும், புகைப்படத்தையும் காட்டப்படுவதாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கூறினார். உதவியாளர் மூலம் அந்த கோரிக்கை வந்தது. கடைசி நேரத்தில் எனது பெயரும், புகைப்படமும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மைக்கில் ஒரு கருத்தினை கூறுவதால் அது புத்திசாலித்தனமானதாகவோ அல்லது நகைச்சுவையாகவோ மாறிவிடாது. அது முட்டாள்த்தனமாக பேசப்படுவதை இன்னும் அதிகம் கேட்க செய்யும். அறிவு இல்லாமல் மரியாதையில்லாமல் வார்த்தைகளை பேசுவது, அந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறார்களோ அவர்களது குண நலனை காட்டாது. பேசுபவரின் குணநலனையே காட்டும்" என தெரிவித்திருந்தார்.
பார்த்திபனின் வீடியோக்கள்: திரிஷாவின் கண்டன ட்வீட்டை தொடர்ந்து வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிடுகிறார் பார்த்திபன். முதலில் ஒரு குரல் பதிவின் மூலம் வருத்தம் தெரிவித்திருந்த அவர்; அடுத்ததாக அந்தணன் பேசிய வீடியோவை ஷேர் செய்திருந்தார். அதனையடுத்து வெளியிட்ட இன்னொரு வீடியோவில், "ஒரு நிகழ்ச்சியில் நான் விஜய், அஜித் பற்றி பேசுகையில் ஒரு ஃபோட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவதென தெரியமால் திகைத்துவிட்டேன். நான் திட்டமிட்டு அவர் ஃபோட்டோவை போட்டு பேச வேண்டுமென ஆசைப்பட்டேன் என சொல்வது பொய். அப்படி நான் பணம் வாங்கிக்கொண்டு எந்த நிகழ்ச்சிக்கும் செல்லமாட்டேன். தவறும் செய்யமாட்டேன்.
எல்லாம் அதுதான்: திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என அந்தணன் உள்ளிட்டோர் சொன்னார்கள். கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. இவங்க ஃபோட்டோவை போட்டு பேச வேண்டும் என்பது எனது லட்சியம் இல்லை. இவங்க வீட்டிலேயே இருந்திருக்கலாம் என நான் சொன்னது ஆதங்கம். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்.
வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: நான் பிரச்னைகளை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது. நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றித்தான் பேசினேன். ஆனால் இது பெண்களுக்கு எதிராக பேசியதாக கூறுகிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டம் ஆகிவிட்டது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராக தெரிவித்திருந்தேன். இப்படி ஒரு ட்வீட் (திரிஷாவின் ட்வீட்) வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன்" என காட்டமாக பேசியிருந்தார்.
இசக்கியின் வேண்டுகோள்: இந்நிலையில் நீண்டுகொண்டே செல்லும் இவ்விவகாரம் குறித்து சைலப்பன் சைக்கிள் மார்ட் படத்தை இயக்கிவரும் இசக்கி தனது எக்ஸ் பக்கத்தில், "சினிமாக்கார்ர்களின் அந்தப்புற கதைகளை அது கற்பனையாக இருந்தாலும் பத்திரிகைகளில் எதோ ஒரு பக்கத்தில் எதோ ஒரு மூலையில் ஆயிரம் வரிகளுக்கு மத்தியில் இருவரிகள் எழுதினாலும் ஏக்கத்துடன் வாசிப்பவரா நீங்கள்? அதையே நாலுபேருக்கு சொல்லி சுகம் காண்பது மகிழ்வது அடட நல்லா இருக்குல என கூடிப்பேசித்திரியும் கூட்டமா சார் நீங்கள்? விடுங்க சார் இது ரொம்ப நெடியடிக்கிறது. நெடியடிக்கிறது புரியும் என நினைக்கிறேன் தெலுங்கில் எப்படி எழுதுவது என தெரியவில்லை ஆகையால் புரிந்துகொள்ளுங்கள்" என பார்த்திபனுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications















