குருவுக்காக ஓடோடி வந்து கண்ணீர் மல்க நின்ற பார்த்திபன்.. நாளை இறுதிச்சடங்கு!
சென்னை: இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், தனது 73-வது வயதில் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் பிரிந்தது.
ஓடோடி வந்த பார்த்திபன்: மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததைத் தொடர்ந்து, பாக்யராஜ் அவர்களின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி: இந்நிலையில், பாக்யராஜ் அவர்களின் உடல் இல்லத்திற்கு வருவதற்கு முன்பாகவே, அவரிடம் உதவி இயக்குநர்களாகத் தங்களது சினிமா பயணத்தைத் தொடங்கி, இன்று தமிழ் சினிமாவில் முத்திரை பதித்துள்ள அவரது ஆசைச் சீடர்களான நடிகர் பார்த்திபன் மற்றும் இயக்குநர் பாண்டியராஜ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் பதறியடித்துக்கொண்டு நுங்கம்பாக்கம் இல்லத்திற்கு ஓடி வந்தனர். இவர்களுடன் நடிகை சுகாசினியும் இணைந்துகொண்டார். தன் குருவின் உடல் வைக்கப்பட வேண்டிய இடம், இறுதி அஞ்சலிக்கு வரக்கூடிய பிரபலங்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு வசதிகள் என அத்தனை இறுதிச்சடங்கு ஏற்பாடுகளையும் பார்த்திபன், சுகாசினி மற்றும் இயக்குநர் பாண்டியராஜ் ஆகியோர் அங்கேயே அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தங்களுக்குச் சினிமா கற்றுக்கொடுத்த ஆசானுக்கு, அவர்கள் செய்த இந்த இறுதி அஞ்சலி கடமை அங்கிருந்தோரை கண்கலங்க வைத்தது. அவரது உடல் இல்லத்திற்கு வந்தடைந்தது முதல் ஒட்டுமொத்தக் கோலிவுட் திரையுலகமே சோகக் கடலில் மூழ்கியுள்ளது.
பெசன்ட் நகரில் தகனம்: மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் இறுதிச்சடங்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. அவரது இல்லத்தில் இன்று இரவு முழுவதும் அஞ்சலி நிகழ்வுகள் தொடரும் என்றும், அதனைத் தொடர்ந்து நாளை மதியம் 1.30 மணிக்குச் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் முறைப்படி தகனம் செய்யப்பட உள்ளதாகவும் அவரது குடும்பத் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications