படப்பிடிப்பே சவாலாக இருந்தது.. ரெட்ரோ படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.. கார்த்திக் சுப்புராஜ்!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. மே 1ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் அட்டகாசமான டிரைலர் வெளியானது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய, கார்த்திக் சுப்புராஜ், ரெட்ரோ திரைப்படம் தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடித்த படம். ஒரு கேங்ஸ்டர் படங்களை எடுக்க வேண்டும் என்பதற்காக நான் சினிமாவிற்க வரல. ஆனால், கிரே சைடில் இருக்கிற விஷயங்கள எழுத்து மூலமாக வெளி கொண்டு வருவது எனக்கு ரொம்ப பிடிச்சமான விஷயம். இதை என்னுடைய முதல் படமான பீட்சா படத்திலிருந்து நான் கையாண்டு வருகிறேன்.

கார்த்திக் சுப்புராஜ்: என்னுடைய படமான இறைவி திரைப்படத்தில் பெண்கள் குறித்தும், காதல் குறித்தும் சொல்லி இருந்தேன். பெண்கள் எப்போதும் ஏன் தங்களுடைய சுதந்திரத்தை ஒரு ஆணிடம் தேடுகிறார்கள் என்கின்ற கேள்வி என்னுடைய மனதில் சிறு வயதில் இருந்தே இருந்தது. அதை சொன்ன திரைப்படம் தான் இறைவி. தற்போது காதலை சொல்லும் படம் தான் ரெட்ரோ. ஆக்சன் காதல் கலந்த திரைப்படமாக இந்த திரைப்படத்தை நான் எடுத்து இருக்கேன். இந்த படத்தின் உடைய கதையை பல ஆண்டுகளுக்கு முன்னாடியே நான் எழுதி விட்டேன். படம் குறித்து நான் பேச வேண்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் தியேட்டருக்கு சென்று நீங்கள் படத்தை பார்க்கும் பொழுது உங்கள் மனதிற்கு கதை என மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அதன்படியே நீங்கள் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்பதால் படம் குறித்து நான் அதிகம் பேசப்போவதில்லை. நிச்சயமாக உங்கள் அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்.

சவாலாக இருந்தது: படத்தின் ஷூட்டிங் 90 நாட்கள் என முடிவு செய்திருந்தோம். ஆனால், 84 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த படத்தை எடுப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஏனென்றால், நாங்கள் எந்தெந்த இடத்திற்கு செல்கிறோமோ அந்தந்த இடத்தில் எல்லாம் மழை எங்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் படக்குழுவினர் அனைவருமே எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள் அவர்கள் அனைவருக்குமே எனது மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜாலியான நபர்: இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதற்கு முன் அவர் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடித்ததில்லை. பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷ்யாம் திரைப்படத்தில் ஒரு காட்சியை பார்த்துவிட்டு தான் இந்த படத்தில் பூஜா நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தேன். நான் நினைத்தபடியே அவருடைய கதாபாத்திரத்தில் அழகாக நடித்துக் கொடுத்திருக்கிறார். உண்மையில் அவர் ஒரு நல்ல நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார். சூர்யாவுடன் நான் இணையும் முதல் திரைப்படம் இதுதான் அவரை ஒரு நடிகராக எனக்கு தெரியும். ஆனால், அவர் இவ்வளவு ஜாலியான நபராக இருப்பார் என்று இப்போது தான் எனக்குத் தெரிந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு அனைவரும் அரட்டை அடித்து ஜாலியாக பேசினார். மே 1ந் தேதி இந்த படம் நிச்சயம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்றார்.


Click it and Unblock the Notifications











