‘’தமிழா தமிழா’’ நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய கரு பழனியப்பன்.. காரணம் இதுதான்!
சென்னை : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் கரு பழனியப்பன் திடீரென விலகி உள்ளார்.
இயக்குநர், நடிகர் சிறந்த பேச்சாளரான கரு பழனியப்பன், இயக்குநர் பார்த்திபனின் புள்ள குட்டிகாரன், ஹவுஸ் ஃபுல் ஆகிய படங்களில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து இயக்குநர் எழிலுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட படங்களிலும் பணிபுரிந்து உள்ளார். இவர் பணியாற்றிய படங்கள் அனைத்தும், ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளன.

இயக்குநர் கரு பழனியப்பன்
முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றிக்கொண்டிருந்த கரு பழனியப்பன் 2003 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடித்த பார்த்திபன் கனவு படத்தை இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாராட்டை பெற்றது. இந்தப்படத்திற்கு மாநில அரசின் சிறந்த இயக்குநர் விருதும் கிடைத்தது.

அடுத்தடுத்த படங்களில்
தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இதில் மந்திரப்புன்னகை படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து, நடிப்பும் எனக்கு கை வந்த கலை என்பதை நிரூபித்தார்.

தமிழா தமிழா
வெள்ளித்திரையில் கலக்கி வந்த கரு பழனியப்பன், சின்னத்திரையிலும் மாஸ் காட்டினார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி போல, தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டான, இதில் குறிப்பாக வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்ற விவாதமும், பிறந்த வீட்டில் பெருமை பேசும் மனைவிகள், ரக்கட் பாய்ஸ் VS சாக்லேட் பாய்ஸ் போன்ற எபிசோடுல்கள் சோஷியல் மீடியாவையை அலறவிட்டன.

அனைவருக்கும் நன்றி
இந்நிலையில், யாரும் சற்று எதிர்பாராத வகையில் கரு பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து அவரது முகநூல் பதிவில் எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி, அன்பு, முத்தங்கள். இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது.

கசப்பாய் இருக்கும் எனில்
தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட "தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது. சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம் என்று அவர் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











