அமீரை திருடன்னு சொல்லலாமா?.. சிவகுமார் ஞானவேல் ராஜாவை கண்டிக்க மாட்டாரா.. கரு. பழனியப்பன் கேள்வி!
சென்னை: 16 வருடங்களாக இயக்குநர் அமீர் பெரும் வலியை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரகனி, சுதா கொங்கரா உள்ளிட்ட பலர் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், தமிழ் சினிமா உலகில் பலரும் குரல் கொடுப்பார்கள் என கரு. பழனியப்பன் தற்போது நீண்ட நெடிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், நான் இப்போ அமீருக்கு ஆதரவாக பேச வரவில்லை என்றும் அதற்கு பதிலாக ஞானவேல் ராஜாவின் திமிரான பேச்சையும் உடல் மொழியையும் கண்டிக்க கடமைப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஞானவேல் பொய் குற்றச்சாட்டு: தனது எண்ணத்தையும் கருத்தையும் கொட்டி பருத்திவீரன் படத்தை இயக்கி நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய எதிர்காலத்தை சினிமாவில் உருவாக்கி கொடுத்தவர் அமீர். அவரை பாராட்டவில்லை என்றாலும், பரவாயில்லை அவர்மீது அபாண்டமான பழியையும் குற்றச்சாட்டையும் ஞானவேல் ராஜா எப்படி வாய்க் கூசாமல் சொல்லாமல் என விளாசி உள்ளார்.

திருடன்னு சொல்லலாமா?: 6 ஆண்டுகள் தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்தின் செயலாளராகவும் தென்னிந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தவர் அமீர். இத்தனை ஆண்டுகளில் ஒருவேளை உணவு கூட சங்கத்தின் காசுல அவர் சாப்பிட்டதே கிடையாது. அதற்கு நானும், மறைந்த இயக்குநர் ஜனநாதனும் தான் சாட்சி என கரு. பழனியப்பன் கூறியுள்ளார். பருத்திவீரன் படத் தயாரிப்பில் 100 முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், பொதுவெளியில் ஒரு படைப்பாளனை திருடன் என எப்படி சொல்லலாம் என ஞானவேல் ராஜாவை கிழித்துத் தொங்க விட்டுள்ளார்.

சிவகுமார் கேட்கமாட்டாரா?: இந்த விவகாரம் கடந்த ஒரு வாரமாக பூதாகரமாகி வரும் நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி அமைதி காத்து வருவது ஏன் என்றும் அவர்களின் அப்பாவும் பழம்பெரும் நடிகருமான சிவகுமார் அய்யா இதையெல்லாம் கேட்கமாட்டாரா? அவருக்கு இந்த திருக்குறளின் அர்த்தம் தெரியுமா? தெரியாதா? என "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை" திருக்குறளையும் பதிவிட்டுள்ளார் கரு. பழனியப்பன். இன்னும் எத்தனை பிரபலங்கள் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கிளம்ப போறாங்க என்றே தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











