சேரன் தன் வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்! - இயக்குநர் கவிதா பாரதி
ஈழத் தமிழர் பற்றிய சேரன் பேச்சுக்கு கலையுலகில் அதிருப்தி வலுத்து வருகிறது.
சேரன் பேச்சு குறித்து இயக்குநரும் நடிகருமான கவிதா பாரதியின் கருத்து இது:

இலங்கைத் தமிழர்கள்தான் திருட்டு வி.சி.டி. தயாரிக்கிறார்கள்.. அவர்களுக்காகப் போராடியதை நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது என்று இயக்குநர் சேரன் ஒரு பட விழாவில் பேசியிருக்கிறார்.
யார் தவறு செய்தார்களோ அவர்கள்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுதான் சரியான செயல்.
அதைவிடுத்து ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் பொறுப்பாளியாக்குவது வேதனையானது...
சென்னையிலும், தமிழகம் முழுவதும் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை திருட்டு வி.சி.டி.கள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன.. அதைச் செய்வதும் ஈழத் தமிழர்கள்தானா சேரன்..?
அவர்களுக்காகப் போராடியது அருவருப்பாக உள்ளது என்னும் சொல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.. எதோ இவர் போராடி தனிஈழம் பெற்றுக் கொடுத்தது போலவும், ஈழத் தமிழினம் அதற்குத் தகுதியில்லாதது போலவும் அவர் வருத்தப்பட்டிருக்கிறார்...
சுப்பிரமணிய சுவாமிகூட இந்தளவுக்கு ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தியதில்லை.
தங்கள் கனவு சிதைந்து, இன்றும் பல சொல்லவொணாத் துயரங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தன் வார்த்தைகளை சேரன் திரும்பப்பெற வேண்டும்!
- இவ்வாறு கவிதா பாரதி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











