கார் டிரைவர்னு எல்லாம் பாக்க மாட்டார்.. சில்க் ஸ்மிதா பற்றி ரம்யா கிருஷ்ணன் கணவர் ஓபன் டாக்!
சென்னை: தமிழ் சினிமாவில் தான் இருந்தவரை கோலோச்சிய நடிகைகளில் ஒருவர் சில்க் ஸ்மிதா. இன்றைய தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களை விடவும் சில்க் ஸ்மிதாவை பார்ப்பதற்காகவே திரையரங்கில் கூடிய ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவரது மறைவுக்குப் பின்னர் இவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இயக்குனர் பாலு மகேந்திரா ஒரு முறை சில்க் ஸ்மிதா குறித்து பேசுகையில் அவரது திராவிட நிறம் தான் அவருடைய அழகுக்கு முக்கிய காரணம் எனப் பொருள்படும் படி கூறியிருப்பார்.
திரைத்துறையில் தொடக்க காலத்தில் மேக்கப் ஆர்டிஸ்டாக தான் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார் சில்க் ஸ்மிதா. இவரது இயற்பெயர் விஜயலட்சுமி. ஆந்திர மாநிலத்தில் இவர் பிறந்திருந்தாலும் இவரது சொந்த ஊர் தமிழ்நாட்டில் கரூர் என்று கூறப்படுகிறது. சில்க் ஸ்மிதா குறித்து தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் பல கதைகள் இன்றும் உலா வருகிறது. குறிப்பாக அவரது மரணம் தொடர்பாக உலா வரும் செய்திகளுக்கு இன்றளவும் விடையில்லை.

சில்க் ஸ்மிதா: இப்படியான நிலையில் இயக்குநரும் நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவருமான கிருஷ்ணா வம்சி, சில்க் ஸ்மிதா உடனான தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அதில், "ஆரம்ப காலத்தில் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை அமைக்க நான் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்த காலகட்டம். குறிப்பாக படப்பிடிப்பு நடக்கும் அனைத்து இடங்களுக்கும் சென்று எனக்கு கொடுக்கப்படும் வேலைகளை மிகவும் சிறப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செய்வேன். அப்படி செய்து கொண்டிருக்கையில் இயக்குநர் வரப்பிரசாத் ராவிடம் அறிமுகம் செய்வதாக ஒருவர் என்னை அழைத்துச் சென்றார். அங்கு வரப்பிரசாத ராவ் படத்தில் சில்க் ஸ்மிதா நடித்துக் கொண்டிருந்தார். இயக்குனர் வரப்பிரசாத் ராவிடம் வேலைக்கு சேர்ந்த பின்னர் நான் வேலை செய்வதை பார்த்த சில்க் ஸ்மிதா என்னை பாராட்டியுள்ளார்.

படங்கள் தயாரித்த சில்க்: ஒரு கட்டத்தில் சில்க் ஸ்மிதா தனது சொந்தத் தயாரிப்பில் படங்களை தயாரித்தார். அவரது தயாரிப்பில் உருவான ஒரு படத்தில் சில மாதங்கள் நானும் வேலை செய்திருக்கிறேன். அவரிடம் வேலை செய்த பின்னர் எனக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்து நான் படங்களை இயக்க ஆரம்பித்து விட்டேன்.

காரில் வந்த சில்க்: ஒரு நாள் அன்னபூர்ணா ஸ்டுடியோ முன்பு நின்று கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஒரு கார் சென்றது. அந்த காரில் யார் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அந்த காரை பெரிதாக கவனிக்காமல் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். என்னை கடந்து சென்ற கார் என்னை நோக்கி திரும்பி வந்தது. திரும்பி வந்த கார் என் முன்னாள் வேகமாக பிரேக் போட்டு நின்றது. காருக்குள் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா காரின் கண்ணாடிகளை இறக்கினார். அவரைப் பார்த்ததும் நான் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி விட்டேன்.

எல்லாரும் ஒன்னுதான்: நான் அதிர்ச்சியானதை பார்த்ததும் நடிகை சில்க் ஸ்மிதா என்னை பார்த்து, என்னை ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார். உடனே நான் உங்களை மறக்க முடியுமா? என்னை நீங்கள் நினைவில் வைத்துள்ளீர்களா இல்லையா என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன் என்று பதில் அளித்தேன். நான் இயக்கிய படங்களை பார்த்ததாகவும் அந்த படங்கள் நன்றாக இருந்ததாகவும் சில்க் ஸ்மிதா என்னிடம் கூறினார். சில்க் ஸ்மிதாவை பொறுத்தவரை டிரைவர் ஆக இருந்தாலும் சரி ஒரு மேக் அப் மேனாக இருந்தாலும் சரி தன்னிடம் வேலை செய்பவராக இருந்தாலும் சரி அவர்களை தனது சொந்தக்காரர்கள் போல தான் நடத்துவார் எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் கிருஷ்ணா வம்சியும் நடிகை ரம்யா கிருஷ்ணனும் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











