KS Ravikumar: கடைசி வரை நடக்காமல் போய்விட்டது.. ரஜினியின் ராணா குறித்து கேஎஸ் ரவிக்குமார் வருத்தம்!
சென்னை: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஹிட் லிஸ்ட். இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத்குமார், சமுத்திரகனி, கௌதம் மேனன், முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். படமே 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள சூழலில் இந்த படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை மேற்கொண்டு வருகிறார் கேஎஸ் ரவிக்குமார்.
அந்த வகையில் அவர் தனது பேட்டி ஒன்றில் தற்போது ரஜினியுடன் இணைந்து தான் இயக்கவிருந்த ராணா படம் குறித்து மனம் திறந்துள்ளார். அந்த படம் கனவாகவே போய்விட்டதாகவும் அவர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கான வேலைகள் நடந்து பூஜையும் போடப்பட்ட சூழலில் படம் ட்ராப் ஆனது குறித்தும் அவர் பேசியுள்ளார்.

ராணா படம்: ரஜினி மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் துவங்கப்பட்டு பின்பு கைவிடப்பட்ட படம் ராணா. இந்த படம் குறித்து தற்போது கேஎஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். தசாவதாரம் படத்திற்கு பிறகு அதே மாஸாக ராணா படம் இருக்க வேண்டும் என தான் நினைத்ததாகவும் அதே போல எந்திரன் படத்திற்கு பிறகு சிறப்பான படமாக அமைய வேண்டும் என்று ரஜினியும் கூறிய நிலையில் ராணா படத்தை துவங்கியதாக எஸ் ரவிக்குமார் தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார். இந்த படத்தை அனிமேஷனாக உருவாக்க திட்டமிட்டதாகவும் ஆனால் படத்தின் கதைக்களத்தை பார்த்து ரஜினி அனிமேஷன் வேண்டாம் என்றும் லைவ் ஷூட்டிங் போகலாம் என்று கூறியயதாக ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ரஜினிக்காக காத்திருந்த கேஎஸ் ரவிக்குமார்: இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து பூஜை போடப்பட்டதாகவும் தீபிகா படுகோனை வைத்து ஒரு பாடலை எடுத்து முடித்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் இதனால் இந்த படம் தொடர்ந்து எடுக்க முடியாமல் போனதாகவும் கூறியுள்ளார். ரஜினி மீண்டு வருவதற்காக தான் காத்திருந்ததாகவும் இந்த இடைவேளையில் தனக்கு விஜய் படம் மற்றும் ஒரு சில சிறிய பட்ஜெட் படங்களை இயக்கும் வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் ரஜினிக்காக தான் தொடர்ந்து காத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அனிமேஷன் படத்திற்கு மாற்றம்: சிங்கப்பூரிலிருந்து சிகிச்சை முடிந்து ரஜினி வந்ததும் அவர் ஒரு வருடத்திற்கு நடிக்க முடியாத சூழல் இருந்ததால் திரும்பி அனிமேஷன் படத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்து ராணாவிற்கு முன் கதை இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து எழுதிய கதை தான் கோச்சடையான் என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அனிமேஷன் தெரியாததால் அனிமேஷன் தெரிந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கட்டும் என்று தான் கூறியதாகவும் தொடர்ந்து லண்டனில் உள்ள ஸ்டூடியோவில் ஷூட் செய்து இந்த படத்தை உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனவாகவே போன ராணா படம்: தான் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதியதாகவும் இதனிடையே ராணா படத்தின் கதை முதல் பாதி இரண்டாம் பாதி அடங்கிய மொத்த ஸ்கிரிப்டும் தன்னுடைய அலுவலகத்தில் அப்படியே இருப்பதாகவும் ரவிக்குமார் மேலும் கூறியுள்ளார். இந்த படத்தின் கதை களத்தில் ரஜினி, அஜித் போன்ற இமேஜ் கொண்ட ஹீரோக்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று கூறியுள்ள கேஎஸ் ரவிக்குமார், விஜய் இனிமேல் படங்கள் செய்வாரா என்று தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார். ராணா படம் கனவாகவே போனதாகவும் அவர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேஎஸ் ரவிக்குமாரின் ஹிட் லிஸ்ட்: தற்போது கே எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் இயக்குனர் விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா லீட் கேரக்டரில் நடித்து வரும் படம் ஹிட் லிஸ்ட். சூரிய கதிர் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு இயக்குனர்கள் படத்தை இயக்கியுள்ளனர். படத்தில் சரத்குமார், சமுத்திரகனி, கௌதம் மேனன், உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள சூழலில் இந்த படத்திற்கான பிரமோஷன்களாக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்
கேஎஸ் ரவிக்குமார்.


Click it and Unblock the Notifications











