பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் செத்தா தான் போராடுவீங்களா? பெண் இயக்குநர் கேள்வி
சென்னை: மாடத்தி படத்தை இயக்கிய பெண் இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் செத்தா தான் போராடுவீங்களா என விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.
கோவை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், இப்படியொரு ட்வீட்டை லீனா மணிமேகலை பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் சுசி கணேசன் மீது முன்னதாக பாலியல் புகார் கொடுத்த லீனா மணிமேகலைக்கு எதிராக மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார் சுசி கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மாணவி தற்கொலை
வகுப்பு ஆசிரியரே கோவை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் குற்றவாளிக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். அந்த ஆசிரியருக்கு அதிக பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.

பெண் இயக்குநர் கேள்வி
தமிழ்ச்சமூகத்தின் (அறிவு, கலை, அரசியல், பொது) அறச்சீற்றம் மிகவும் போலித்தனமானது. என்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண்கள் உயிரிழந்தால் தான் அனைவரும் பொங்குவார்கள் ஆனால், உயிரோடு வாழும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக எடுத்து உரைத்தால் அவர்கள் மீது பழி போடும் நிலை தானே உள்ளது என கேள்வி எழுப்பி உள்ளார்.

சாக வேண்டும்
"பாலியல் வன்முறைக்குள்ளாகும் பெண்கள் சாக வேண்டும். உயிரோடு இருக்கக் கூடாது. அப்படி என்றால் தான் கொந்தளிக்கும். உடனே பரபரப்பாக good touch/ bad touch பற்றி விவாதிக்கும். குற்றவாளியை தூக்கில் போட துடிக்கும்" என மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார்.

தப்பித் தவறி உயிரோடு இருந்தால்
"தப்பித் தவறி உயிரோடு இருந்து தனக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைப் பற்றி வெளியே சொல்ல தலைப்பட்டாலோ எதிர்த்தாலோ அந்தப் பெண்ணை சந்தேகப்படும், தூற்றும், "பிரச்சனைக்குரியவள்" என பட்டம் சூட்டும், வாழவே விடாமல் சதா நெருக்கடிகளை தருவதோடு வேடிக்கையும் பார்க்கும். படையாக பெண்கள் திரண்டு தங்களிடம் அத்துமீறியதாக ஒருவனை குற்றம் சாட்டினாலும் அவனுக்காக வாதாடும், மேடையேற்றும், பாதுகாக்கும்" என கொதித்தெழுந்துள்ளார்.

சமூகத்தால் கொல்லப்பட்டவர்கள்
"இங்கு பாலியல் வன்முறையால் இறந்த பெண்கள் யாரும் தற்கொலையால் இறக்கவில்லை. இந்த சமூகத்தால் கொல்லப்பட்டவர்கள் தாம்." என நீண்ட பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை கூறியுள்ளார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான மாடத்தி திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளியது.

சுசி கணேசன் மீது புகார்
திருட்டுப் பயலே, கந்தசாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை பாலியல் புகார் அளித்திருந்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை மறுத்த இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது ஒரு ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு போட்டது பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











