வணங்கான் பாலாவை வெளுத்து வாங்கிய மேற்குத் தொடர்ச்சி மலை இயக்குநர்.. படத்துல இருக்கும் பிரச்னை என்ன?
சென்னை: இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாகவும், வரவேற்பைப் பெற்ற படமாகவும் வணங்கான் உள்ளது. படத்தினைப் பார்த்த ரசிகர்களுக்கு படம் திருப்தியைக் கொடுத்தாலும், படத்தின் மீது சில அரசியல் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. அதேபோல் மேக்கிங்கில் படத்தின் முதல் காட்சியை எங்கிருந்து தொடங்கினாரோ அங்கேயே படத்தை முடித்தது, திரைக்கதையில் பிரமாதப்படுத்திவிட்டார் பாலா என பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி, வணங்கான் படத்தின் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அருண் விஜய் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடித்து நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தார். மேலும் அவரது திரை வாழ்க்கையில் வணங்கான் மாபெரும் மைல் கல்லாக மாறியுள்ளது. படத்தில் இவர் நடித்த ரிதா, ரேஷினி பிரகாஷ் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். இரண்டாம் பாதியில் இருந்து படத்திற்குள் வரும் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி தங்களது வேலையை சிறப்பாகச் செய்துள்ளனர்.

படத்தின் ஒருவரிக் கதை என்றால், ஒரு மாற்றுத் திறனாளியின் வலி, மற்றொரு மாற்றுத்திறனாளிக்குத்தான் தெரியும். மேலும், பாலியல் குற்றங்களுக்கு, குற்றம் செய்தவர்களைக் கொல்வதுதான் சரி என சமூகமாக ஒரு முடிவினை எடுப்பதைவிடவும், நீதிமன்றமும் அந்த முடிவுக்கு துணைபோவதுபோன்ற க்ளைமேக்ஸ், இப்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வணங்கான்: பாலியல் குற்றங்களைச் செய்பவர்களைக் கொலை செய்வது என்பது சட்டத்தின் படி தவறு என்பது மட்டும் இல்லாமல், அந்தக் கருத்தினை நீதிமன்றமே ஏற்பது போலவும், நீதிமன்றமே அதனை ஆதரிப்பது போலவும் க்ளைமேக்ஸ் வைத்ததற்கு பதிலாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் அதனை தைரியமாக எதிர்கொள்ளும்படியான காட்சிகள் படத்தில் இல்லை. மேலும் திரைப்படம் போன்ற காட்சி ஊடகத்தின் பெண்களுக்கு தைரியம் கொடுக்கும் காட்சிகள், வலிமையை உணர்த்தக் கூடிய காட்சிகள் என எதுவும் இல்லை.

லெனின் பாரதி: இப்படியான நிலையில்தான் மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில் வணங்கான் படம் குறித்து தனது விமர்சனத்தை காட்டமாக முன்வைத்துள்ளார். அதில் அவர், " பாலா அவர்களே.. மாற்றுத் திறனாளிகள் மேல் பெருங்கருணை கொள்கிறேன் என்கிற போர்வையில் உங்கள் ஆணாதிக்க & ஆழ்மன வக்கிரங்களை திரையில் நிகழ்த்தி பெண்கள் மற்றும் சிறார் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடும் எண்ணத்தையும் சமூகத்தையும் பின்னுக்கு இழுக்காதீர்கள்.. " என பதிவிட்டுள்ளார்.
கருத்து: லெனின் பாரதியின் இந்த பதிவு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் லெனின் பாரதியின் விமர்சனமும் அவர் வணங்கான் படத்தினைப் பார்த்த கோணமும் சரிதான் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பாலா போன்ற பலரது கவனத்தினை ஈர்த்த இயக்குநர்கள் இது போன்று தங்களது படங்களில் செய்யாமல் இருக்க வேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











