உங்களின் உண்மைக்காக என்றும் துணை நிற்போம் தோழா! பா. ரஞ்சித்துக்கு ஆதரவாக களமிறங்கிய இயக்குநர்!
சென்னை: கடந்த 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவரது படுகொலை தொடர்பான விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் எனவும் ஆம்ஸ்டாராங் மறைவையொட்டி நினைவேந்தல் நடத்தப்பட்டது. இதனை இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைத்தது. இதில் பா. ரஞ்சித் பேசியதற்கு பல இயக்குநர்கள் தொடங்கி சமூக செயல்பாட்டாளர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் பா. ரஞ்சித்தை தாக்கி பேசியும் பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் இயக்குநர் லெனின் பாரதி பா. ரஞ்சித்துக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நினைவேந்தல் பேரணியை நடத்தியது. இதில் பேசிய பா. ரஞ்சித் ஆளும் திமுக, ஆண்ட அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல கட்சிகளையும் விமர்சித்து பேசினார். குறிப்பாக பாஜகவையும் திமுகவையும் காட்டமாக விமர்சித்தார். அதேபோல் தலித் எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர்கள், மேயர்கள் உள்ளிட்டவர்களையும் விமர்சனம் செய்தார். இவரது பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மோகன் ஜி: நினைவேந்தல் நடந்த தினத்திலேயே இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில், " என்னங்கடா இது. சினிமால வர்ற டயலாக் எல்லாம் மேடையில பேசுறீங்க.. எப்ப பார்த்தாலும் ரவுடி நாங்க தான், பத்து கேஸ் வாங்க போறது நாங்க தான், மெட்ராஸ் நாங்க தான்னு கூவுறீங்க.. நாங்க எல்லாம் யாருதான்டா அப்ப சென்னையில.. அடுத்தவன் வரலாற சினிமால மாத்தி சொன்னது பத்தாதுன்னு இப்ப மேடையில வேற" என பதிவிட்டிருந்தார்.

கௌதமன் : அதேபோல் இயக்குநர் கௌதமன் பேட்டி ஒன்றில், "பாதிக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் கூக்குரல் எழுப்புகின்றார் என்றால், உரிமைக் குரலை எழுப்புகின்றார் என்றால் அது நியாயமானது. ஆனால் இங்கு என்ன சிக்கல் என்றால் என் இனத்திற்கான உரிமையைப் பேசுகின்றேன் என மற்ற சமூகத்தை தாக்கிப் பேசுவது என்பதுதான். இன்றைக்கு ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜை மையப்படுத்தி கேள்வி எழுகின்றது. இவர்கள் படைப்பு குறித்து திட்டி கமெண்ட் செய்பவர்கள் எல்லாம், பா. ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜால் பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொள்கின்றார்கள். அதேநேரத்தில், அவர்கள் பாதிப்படையும் வகையில் நாம் படைப்பினை உருவாக்கியுள்ளோமா என பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் யோசிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

லெனின் பாரதி: இவ்வாறு பா. ரஞ்சித்தின் படங்களுக்கு எதிராகவும் அவரது சமூக செயல்பாடுகளுக்கு எதிராக நேரடியாகவும் மறைமுகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் இது தொடர்பாக எதுவுமே பேசாமல் உள்ளனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் பக்கத்தில், "தோழர் பா. ரஞ்சித் அவர்களின் மீது எத்தனை எத்தனை அவதூறுகள், பொய்கள், ஜோடிப்புகள், காழ்ப்புணர்ச்சிகள், ஏளனங்கள், சாதிவெறி வன்மங்கள், கள்ள மெளனங்கள்... காலம் யாவற்றுக்குமான பதிலை உரக்கச் சொல்லும்.. சமூக சமத்துவத்திற்கான உங்களின் உண்மையான, உறுதியான பயணத்தில் என்றும் துணை நிற்போம் தோழா.." என பதிவிட்டு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
தங்கலான்: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வரும் 15ஆம் தேதி வெளியாகவுள்ள படம் தங்கலான். இந்த படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











