மம்முட்டியை வேண்டவே வேண்டாம்னு சொன்ன லிங்குசாமி.. படம் ஓடவே ஓடாதுனு சொன்ன மம்முட்டி.. எதுக்கு தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது எல்லாம் குடும்ப உறவுகளை மையப்படுத்திய படங்கள் மிகக் குறைவாகவே வெளியாகிறது. குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதையைக் கொண்ட படங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் முன் வருவதில்லை. அவர்களின் பெரும்பாலான நோக்கமே ஆக்ஷன், அதிரடி படங்களாகத்தான் உள்ளது. இப்படியான நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஆனந்தம் படம் வெளியாகி நேற்றுடன் அதாவது மே 25 ஆம் தேதியுடன் 24 ஆண்டுகள் ஆகியுள்ளது. படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த படத்தின் கதையை பலரிடம் சொல்லிய லிங்குசாமிக்கு பச்சைக் கொடி காட்டியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி. ஆர்.பி. சௌத்ரிக்கு இந்த கதை மிகவும் பிடித்துப் போனதால், படத்தின் பணிகளை உடனடியாக தொடங்கினார். மேலும் படத்தின் மையக் கதாபாத்திரமாக மம்முட்டியை நடிக்க வைக்கலாம் என்று கூறியதும் ஆர்.பி. சௌத்ரிதான். ஆனால் லிங்குசாமிக்கு இந்த படத்தில் சரத்குமார் அல்லது விஜயகாந்த் நடித்தால் சிறப்பாக இருக்கும் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற எண்ணம் இருந்தது.
தனது மனதில் இருந்ததை ஆர்.பி. சௌத்ரியின் நண்பரான திருப்பூர் சுப்பிரமணியனிடம் கூறியுள்ளார். அவரும் அதை ஆர்.பி சௌத்ரியிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டவுடன் லிங்குசாமியை அழைத்த ஆர்.பி. சௌத்ரி, " யோவ்.. இந்த படத்தில் யார் நடித்தாலும் ஓடும்..யா. உன்னோட படத்தின் கதைதான் ஹீரோ. படம் கட்டாயம் 100 நாள் ஓடும். போய் படத்தை ஆரம்பிக்கும் வேலையைப் பாரு" என்று கூறியுள்ளார். மேலும் விஜயகாந்த்திடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த ஒன்றரை வருடத்திற்கு அவரிடம் கால்ஷீட் இல்லை. சரத்குமாரிடம் உடனடியாக தேதிகள் இல்லை. அதன் பின்னர்தான் இந்த படத்தில் மம்முட்டி நடிப்பது உறுதியானது.

ஆனந்தம் படம்: ஆனந்தம் படம் குறித்து எக்ஸ் பக்கத்தில், 'Missed Thrills' என்ற பெயரில் செயல்படும் ரசிகர் ஒருவர் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில்," தமிழ் சினிமாவில் அண்ணன்-தம்பி உறவையும் குடும்ப பந்தத்தையும் மையப்படுத்தி பல வெற்றி படங்கள் வந்தன. அதில் ஓர் முக்கிய படைப்பு இயக்குநர் லிங்குசாமியின் முதல் படமான ஆனந்தம். இவரது சொந்த அனுபவங்கள் இந்தப் படத்தின் கதைக்கரு.
படக்குழு: மம்முட்டி, முரளி, அப்பாஸ், தேவயானி, ரம்பா, சினேகா, டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா என பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தனர். மம்முட்டியின் முதன்மைப் பாத்திரம், திருப்பதி, குடும்பத்தை ஒருங்கிணைக்கும் அண்ணனாக அனைவரையும் கவர்ந்தது. முதலில் இப்படத்திற்கு மம்முட்டி, முரளி, சூர்யா/அஜித் அவர்கள் தான் தேர்வு செய்யப்பட்டனர். சூர்யா நந்தா படத்தில் கமிட் ஆனதால் நடிக்கவில்லை. அதன் பின்னர் சூர்யாவுக்கு பதில் அப்பாஸ் நடித்தார்.
வரவேற்பும் வசூலும்: 2001 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படம் தெலுங்கில் "சங்கராந்தி" (2005) என்று ரீமேக் செய்யப்பட்டது. எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. என்னவளே(2000) படத்தில் தான் சினேகா அறிமுகமானார். ஆனால் ஆனந்தம் திரைப்படம் சினேகாவுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தது. ஆனந்தம் குடும்ப மதிப்புகளையும் உறவுகளின் அழகையும் கொண்டாடும் ஒரு காலம் கடந்த படைப்பு" என்று பதிவிட்டுள்ளார்.

படம் ஓடாது: படத்தில் நடித்த நடிகர் நாராயணன் படம் குறித்து ஒரு முறை கூறும்போது, " நாராயணன் படம் எப்படியும் ஓடாது. சௌத்ரி சாருக்கு இந்த படம் நஷ்டம் தான் கொடுக்கும் என்று கூறிக் கொண்டே இருந்ததாகவும் கூறினார். மேலும் எனக்கு இந்த படத்தில் சம்பளம் கொடுத்தால் சௌத்ரி சாருக்கு நஷ்டம்தான் ஏற்படும் அதனால், கேரளா ரைட்ஸை மம்முட்டி எழுதி வாங்கிக் கொண்டு படத்தை அவரே ரிலீஸ் செய்தார். படம் தமிழ்நாடு, கேரளா என இரண்டு மாநிலங்களிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் ஆர்.பி சௌத்ரி முன்பு கூறியது போல படம் 100 நாட்களை கடந்து ஓடியது.
திருப்பதி பிரதர்ஸ்: இந்த படம் இயக்குநர் லிங்குசாமிக்கு முதல் படம். தனது முதல் படத்தின் கதையை தனது சொந்த வாழ்க்கையில் இருந்து எழுதியிருந்தாலும் அதை சிறப்பாக படமாகவும் மாற்றியுள்ளார். மேலும் இந்த படத்தில் மம்முட்டியின் பெயர் திருப்பதி. படத்தில் அவர் நடத்தும் மளிகை கடையின் பெயர் திருப்பதி மளிகை ஸ்டோர்ஸ் என்று இருக்கும். அதேபோல் லிங்குசாமி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய போது அதற்கு திருப்பதி பிரதர்ஸ் என்றுதான் பெயரிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யுகபாரதி: இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மற்றொரு கலைஞன் என்றால் அது பாடலாசிரியர் யுகபாரதி. ஆனந்தம் படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற பாடலான, " பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" பாடலை எழுதி, பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இந்த பாடல் படத்திற்கு அடையாளமாகவே மாறிப்போனது. இந்த பாடல் யுகபாரதிக்கு சிறந்த பாடலாசிரியர் விருது எல்லாம் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பின்னர் யுகபாரதி வேறு எந்த படத்திலும் அடுத்த ஒரு ஆண்டுக்கு கமிட் ஆகவில்லை. மீண்டும் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ரன் படத்தில் பாடல்கள் எழுதினார். இந்த படம் 2002ஆம் ஆண்டு வெளியானது. ரன் படத்தில் இருந்து இப்போதுவரை சினிமா தளம், இலக்கியத் தளம் மற்றும் அரசியல் மேடைகள் என தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டே இருக்கிறார் பாடலாசிரியர் யுகபாரதி.

குடும்ப படங்கள்: ஆனந்தம் படத்திற்கு அன்று போல் இன்றைக்கும் ரசிகர்கள் ஏராளம் உள்ளனர். படத்தை பிரைம் டைம் மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பினால் கூட டி.ஆர்.பி-யில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு இந்த படத்திற்கு ரசிகர்கள் உள்ளார்கள். இன்றைக்கு சினிமா பார்க்க வரும் ரசிகர்கள் குடும்பப் படங்கள் வெளியாகும் போது கை கொடுத்துக் கொண்டுதான் உள்ளார்கள். ஆனால் முன்னணி கதாநாயகர்கள் ஆக்ஷன், வெட்டு, குத்து, ரத்தம், போதை போன்ற கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். பெரிய நடிகர்களும் குடும்பப்பாங்கான படங்களில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து வருகிறார்கள். அண்மையில் சூரி நடிப்பில் வெளியான மாமன் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











