லியோ 2 கதை ரெடி.. விஜய் ஓகே சொன்னால் ஆரம்பிக்கலாம்.. லோகேஷ் கனகராஜ் பேட்டி!
சென்னை: அரசியல் கட்சியை அறிவித்த விஜய், தான் ஒப்புக்கொண்ட இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக கூறியிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், லியோ இரண்டாம் படத்தின் கதை ரெடி, விஜய் ஓகே சொன்னால் ஆரம்பிக்கலாம் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக மாறி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ், குறும்படத்தை இயக்கி சினிமாவில் தனது அறிமுகத்தை கொடுத்த இவர், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய மிகப் பெரும் வெற்றி படங்களை இயக்கினார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை அள்ளியது.

இந்த படத்தில் விஜய்யுடன் கில்லி படத்திற்கு பிறகு திரிஷா ஜோடியாக நடித்திருந்தார். மேலும், அர்ஜுன், சஞ்சய்தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா மோகன் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். லியோ படத்தின் முதல் பாதி மிக நன்றாக இருந்ததாகவும், இரண்டாவது பாதியில் திரைக்கதை மிகவும் சுமாராக இருந்ததாகவும் கலவையான விமர்சனங்கள் வந்தன. இருப்பினும் ஒட்டுமொத்த அளவில் படம் வசூலை குவித்தது.
ரசிகர்கள் கவலை: விக்ரம் படத்தில் கைதி படத்தின் கனெக்ஷனை கொடுத்தது போல, லியோ படத்திலும் லோகேஷ் கனகராஜின் சினிமா டிக்கெட் யூனிவர்சுக்குள் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தவாறு இந்த படம் அவரது முந்தைய படங்களான கைதி மற்றும் விக்ரம் படத்தின் காட்சிகளுடன் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் லியோ 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்பட்டது. இந்த சூழலில் அரசியல் கட்சியை அறிவித்த விஜய், தான் ஒப்புக்கொண்ட இன்னும் ஒரு படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
லியோ 2 கதை ரெடி: இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் லியோ 2 பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் விஜய்யின் எதிர்கால திட்டங்கள் வெகு உயரமாக இருக்கின்றன. லியோ 2 படத்திற்கான கதை ரெடியாக உள்ளது. விஜய் சார் ஓகே சொல்லிவிட்டால் ஆரம்பிக்கலாம். லியோவில் சொல்லாத பல கதைகள் லியோ இரண்டாம் பாகத்தில் வரும் என்று கூறியுள்ளார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
கூலி: ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ள லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதில், ரஜினியுடன் பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்காக 4 முதல் 5 மாதங்களாக முன்தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், ஜூலை முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











