Lokesh Kanagaraj: வயசானாலும் நான் சிங்கம்.. லியோ படத்தின் கதையை சொன்ன லோகேஷ்!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனை படக்குழுவினர் மிகப்பெரிய அளவில் முடுக்கி விட்டுள்ளனர்.
முன்னதாக படத்தின் போஸ்டர்கள், 2வது பாடல், ட்ரெயிலர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியான நிலையில், வரும் திங்கட்கிழமை படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.
லியோ படத்தின் கதையை வெளிப்படுத்திய லோகேஷ்: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மிகுந்த எதிர்பார்ப்புகளை சர்வதேச அளவில் இந்தப் படம் உருவாக்கியுள்ளதற்கு காரணம் விஜய் -லோகேஷ் கூட்டணியாக கருதப்படுகிறது. முன்னதாக மாஸ்டர் படத்தில் இந்தக்கூட்டணி மாஸ் காட்டியுள்ளதும், லோகேஷின் முந்தைய படமான விக்ரம் படத்தின் இன்டஸ்ட்ரியல் ஹிட் உள்ளிட்டவை படத்தின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

படத்தில் விஜய் கேங்ஸ்டராக பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் 14 வருடங்களுக்கு பிறகு விஜய் மற்றும் த்ரிஷா இணைந்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரெயிலரிலும் இவர்களின் காம்பினேஷன் காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாகவே லியோ படத்தின் தெறிக்கவிடும் பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
லியோ பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்த மொழிகளில் லியோ படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மாஸ் காட்டின. தொடர்ந்து படத்தின் 2வது பாடல், ட்ரெயிலர் என அதிரடி சரவெடியாக அடுத்தடுத்த லியோ அப்டேட்களால் ரசிகர்கள் திணறித்தான் போனார்கள். இந்நிலையில் வரும் திங்கட்கிழமை படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக தயாரிப்புத்தரப்பு தெரிவித்துள்ளார்.

இதனிடையே படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் இன்னும் சில தினங்களில் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே வீடியோ மூலம் விஜய் பேசவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்தடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பேட்டிகளும் படத்தின் ப்ரமோஷனாக தொடர்ந்து வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தற்போது லோகேஷ் தன்னுடைய பேட்டியொன்றில் லியோ படத்தின் கதை குறித்து பேசியுள்ளார்.
அவர் தனது பேட்டியொன்றில், சர்க்கஸில் கிங்காக நேரத்திற்கு சாப்பாடு, கைத்தட்டல், பாராட்டு என பழகிய சிங்கத்தை வயதான காரணத்தால் மீண்டும் காட்டிற்குள் விட்டுவிடுகிறார்கள். அப்படி விடப்பட்ட சிங்கம், வயதான காரணத்தாலும் வேட்டையாடும் பழக்கத்தை மறந்த காரணத்தாலும் எதையும் செய்ய மனமில்லாமல் ஒரு இடத்தில் ஒடுங்கிப்போய் உட்கார, அது எதற்கும் லாயக்கில்லை என்று நினைக்கும் நரிக்கூட்டம் அதை சாப்பிட முயற்சி செய்வதாக அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால் அந்த நரிக்கூட்டத்தை சிங்கம் எதிர்கொள்ளும் போக்கே மிகவும் சிறப்பானது. வயதானாலும் தான் சிங்கம், தன்னை அப்படியெல்லாம் நரிக்கூட்டத்தால் ஒன்றும் செய்து விட முடியாது என்பதை அந்த சிங்கம் தனது பார்வையாலேயே வெளிப்படுத்தும் என்றும், அதையொட்டியே லியோ படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அவ்வாறுதான் லியோ படத்தில் யாருக்கும் தெரியாமல் விஜய், லியோவாக வாழ்ந்துவருவதாக காட்டப்பட்டுள்ளது. லோகேஷ் சொல்லும் இந்த சிங்கத்தின் கதை எப்படி லியோ படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











