Vidaamuyarchi: சரவெடி! விடாமுயற்சி என்னோட கதை இல்லை.. கதையைச் சொன்னதே அஜித்தான்.. மகிழ் திருமேனி ஓபன்
சென்னை: அஜித்குமார் நடிப்பில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் விடாமுயற்சி. அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பிப்ரவரி முதல் வாரத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. லைகா புரெடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை, ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கின்றது. படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் அவர் கூறியது அஜித் ரசிகர்களை கொஞ்சம் அதிர்ச்சி அடையவும் செய்துள்ளது.
அஜித்குமாருக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக உள்ளது. குறிப்பாக, அவரது சினிமா வாழ்க்கையிலும் சரி, அஜித்துக்கு மிகவும் பிடித்த ரேஸிங்கிலும் சரி இரண்டிலும் கவனம் செலுத்தக் கூடிய ஆண்டாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. இதற்காக இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்தே அஜித் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு உள்ளார்.

வரும் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சி ரிலீஸ், ஏப்ரல் 14ஆம் தேதி குட் பேட் அக்லி ரீலீஸ் என சினிமாத்துறையில் முதல் நான்கு மாதங்களுக்குள், இரண்டு படங்களை ரிலீஸ் செய்கின்றார். அதேபோல், கார் ரேஸில் களமிறங்கியுள்ள அஜித்குமார் ரேஸிங் அணிக்கு இந்த ஆண்டு அக்டோபர் வரை உலகின் பல்வேறு நாடுகளில் கார் ரேஸில் கலந்து கொள்ளவுள்ளது. இப்படியான நிலையில் அஜித் தனது இரண்டு படங்களிலும் அவரது அனைத்து வேலைகளையும் முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டார்.

கதை: இப்போது அஜித் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது விடாமுயற்சி படத்திற்காகத்தான். இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இப்படியான நிலையில், விடாமுயற்சி படத்தின், இயக்குநர் மகிழ் திருமேனி, அண்மையில் அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ள விஷயங்கள் அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. அதாவது, அந்த பேட்டியில், “ இந்தப் படத்தின் கதை என்னுடையது கிடையாது. அஜித் சார் தான் இந்தக் கதையை எனக்குச் சொன்னார். அவரோட இமேஜுக்கும் இந்தப் படத்தில் அவர் செய்துள்ள கதாபாத்திரத்திற்கும் கொஞ்சம் கூட தொடர்பே இல்லை. ஆனாலும் அஜித் சார்தான் இந்தப் படத்தை பண்ணனும்னு முடிவெடுத்தார்.

அஜித்: மேலும் அவர் என்னிடம் கூறியது, 'நாம ரெண்டு பேருமே நம்மளோட, கம்ஃபர்ட் ஜோனை விட்டு, வெளியே வரவேண்டும். அப்படியான படமாக இந்தப் படம் இருக்க வேண்டும்' எனத் தெரிவித்தார். அதன் பின்னர்தான் இந்தப் படத்தோட கதையில் நான் வேலை செய்ய ஆரம்பித்தேன். நான் கதை எழுதும்போது அரபு நாடுகளில் படத்தை எடுக்கலாம் என நினைத்துத்தான் திரைக்கதை எழுதினேன். ஆனால், அங்கு படப்பிடிப்பு நடத்த முடியவில்லை.

அஜர்பைஜான்: அதன் பின்னர் இந்தப் படத்தின் கதைக்கு, மிகவும் நீண்ட, மற்றும் ஆள் நடமாட்டமே இல்லாத நெடுஞ்சாலை வேண்டும், எனவே அஜித் சார் தான், படத்தை அஜர்பைஜானில் நடத்தலாம் எனத் தெரிவித்தார். அதற்கு தாயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்தும் ஒப்புதல் வர, படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடத்தினோம்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்தப் பேட்டி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











