ஐஸ்வர்யா ராய், சிம்ரன் இருந்தும் இப்படியா நடக்கணும்... மணிரத்னமே ஏமாந்து போன அந்த தருணம்!
சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் 1980களில் இருந்து படங்கள் இயக்கி வருகிறார்.
தளபதி படத்திற்குப் பின்னர் இளையராஜாவின் கூட்டணியில் இருந்து விலகி ஏஆர் ரஹ்மானுடன் சேர்ந்துவிட்டார்.
மணிரத்னம் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான படங்களின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.
ஆனால், இக்கூட்டணியில் ஐஸ்வர்யா ராய், சிம்ரன் இணைந்தும் மணிரத்னம் இயக்கிய படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.

பொன்னியின் செல்வன் 2
தமிழ்த் திரையுலகில் கனவுப் படமாக இருந்த பொன்னியின் செல்வனை நனவாக்கியது மணிரத்னம் தான். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம், பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடித்தும் தோல்வியடைந்த படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

வரலாற்றுப் பின்னணியில் இருவர்
இதிகாசங்கள், புராணங்களை பின்னணியாக வைத்து படங்கள் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர் மணிரத்னம். அதேபோல், பயோ பிக் படங்களும் அவரது ஃபேவரைட்டான ஒன்று. அதன்படி, மறைந்த எம்ஜிஆர், கருணாநிதி இருவரது நட்பை பின்னணியாக வைத்து இயக்கிய இருவர் திரைப்படம் 1997ம் ஆண்டு வெளியானது. மோகன்லால், ஐஸ்வர்யா ராய் நடித்த இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார். மேக்கிங் உட்பட அனைத்தும் கிளாசிக்கலாக இருந்தும் இருவர் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

கன்னத்தில் முத்தமிட்டால்
அதேபோல், அலைபாயுதே படத்தில் மாதவனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியது மணிரத்னம். அதனைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் - மாதவன் இணைந்த படம் கன்னத்தில் முத்தமிட்டால். இதில் மாதவனுடன் சிம்ரனும் நடித்திருந்தார். ஏஆர் ரஹ்மானின் இசைக்காக தேசிய விருது கிடைத்த போதும், கன்னத்தில் முத்தமிட்டால் மிகப் பெரிய தோல்வியை தழுவியது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்ரன் நடித்த ஒரே திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்த எழுத்து
சூர்யா, மாதவன், சித்தார்த், பாரதிராஜா, த்ரிஷா, மீரா ஜாஸ்மின், இஷா தியோல் என மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டணியில் உருவான திரைப்படம் ஆய்த எழுத்து. பொலிட்டிக்கல் ஜானர் படமாக உருவான ஆய்த எழுத்து படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், இந்தப் படமும் நெகட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்தது. இந்தப் படம் தமிழ், இந்தி என இருமொழிகளில் வெளியாகியும் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

ராவணன்
மணிரத்னம் இயக்கத்தில் 2010ல் வெளியான ராவணனும் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவானது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்தனர். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம் தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. ஆனால், ராவணன் திரைப்படமும் மணிரத்னத்துக்கு மிகப் பெரிய தோல்வியை கொடுத்தது.

கடல்
கார்த்திக்கின் மகன் கெளதம் ஹீரோவாக அறிமுகமான கடல் படத்தையும் மணிரத்னம் தான் இயக்கினார். இதில் நடிகை ராதாவின் மகள் துளசி ஹீரோயினாக அறிமுகமானார். கெளதம் கார்த்திக், துளசி ஆகியோருடன் அர்ஜுன், அரவிந்த் சாமி ஆகியோரும் நடித்திருந்தனர். இந்தப் படமும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











