இளையராஜாவை வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை.. பல வருடங்கள் கழித்து சீக்ரெட் சொன்ன மணிரத்னம்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் இப்போது விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கடைசியாக ஜமா படத்துக்கு இசையமைத்திருந்தார். இவை தவிர்த்து வேறு சில படங்களுக்கும் இசையமைக்கிறார்.அவரது வாழ்க்கை வரலாறு படமாவது குறிப்பிடத்தக்கது. அதனை அருண் மாதேஸ்வரன் இயக்க கமல் ஹாசன் திரைக்கதை எழுத; தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார்.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
அவ்வளவு பிஸி: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.
1500 படங்கள்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். ஆனால் இளையராஜா அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்வதில்லை. சில மாதங்களுக்கு முன்புகூட ஒரு சிம்பொனியை எழுதி முடித்திருக்கிறார்.
இயக்குநர்களுடன் சண்டை?: இதற்கிடையே இளையராஜா இயக்குநர்கள் பாலசந்தர், மணிரத்னம் உள்ளிட்டோருடன் மோதல் போக்கை கடைப்பிடித்தார். அதன் காரணமாகத்தான் அவர்கள் படத்தில் பணியாற்றுவதை நிறுத்தினார் என்ற தகவல் ஒன்று உண்டு. மேலும் இளையராஜாவை ஓரங்கட்டத்தான் பாலசந்தரும், மணிரத்னமும் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார்கள் என்ற ஒரு பேச்சும் உண்டு.
மணிரத்னம் பதில்: இந்நிலையில் இளையராஜாவோடு பணியாற்றாதது குறித்து மணிரத்னத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மணிரத்னம், “இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய இருவருமே ஜீனியஸ்தான். சினிமாவில் அவ்வளவு நேர்த்தியான கலைஞர்கள். இரண்டு பேரையுமே எனக்கு பிடிக்கும். அதேசமயம் ரஹ்மானின் இசைக்கு ஏற்ப என்னுடைய படங்கள் மாறின. அந்தக் காரணங்களுக்காகத்தான் ரஹ்மானுடன் தொடர்ந்து பணியாற்றுகிறேன். மற்றபடி இளையராஜாவை வேண்டுமென்றே நிராகரிக்கவில்லை. அவருக்கு இணை அவர்தான்” என்றார்.


Click it and Unblock the Notifications











