அந்த கொடுமையை ஏன் அண்ணா கேட்குறீங்க.. இயக்குநரை நம்பி ஏமாந்தேன்.. விஜய்யின் ஓபன் டாக்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் ஒரு இயக்குநரை நம்பி சென்று படுதோல்வியை சந்தித்தாக மனம் திறந்து பேசியுள்ளார். அதுகுறித்த வீடியோ தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். எஸ்.ஏ.சியின் மகன் என்ற அடையாளத்தோடு அறிமுகமானாலும் தனது திறமையால் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய். சமீபத்தில் அவர் நடித்த வாரிசு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் டூ இளைய தளபதி
ஆரம்பகாலத்தில் தந்தை துணையுடன் பயணித்து வந்த விஜய் ஒருகட்டத்தில் தனது திறமையை வளர்த்து தனியாக வளர ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த குஷி, துள்ளாத மனமும் துள்ளும், திருமலை, போக்கிரி உள்ளிட்ட ஏராளமான படங்கள் மெகா ஹிட்டடித்தன. இதனால் இன் டஸ்ட்ரியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட விஜய் இளைய தளபதி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ஆனார். அவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக அணிதிரண்டனர்.

தொடர் தோல்விகளை சந்தித்த விஜய்
தொட்டதெல்லாம் தங்கம் போல் விஜய் நடித்த படங்கள் எல்லாம் ஹிட்டாகிக்கொண்டே இருந்தன. குறிப்பாக திருமலை படம் விஜய்க்கென ஒரு கமர்ஷியல் பாதையை போட்டுக்கொடுத்தது. இதனையடுத்து அந்தப் பாதையில் பயணித்த விஜய் கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் ஹீரொவானார். ஆனால் ஒருகட்டத்துக்கு மேல் அதாவது போக்கிரி படத்துக்கு பிறகு அவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தன.

சுறாவுக்கு இரையான விஜய்
அதில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் சுறா. விஜய்யின் 50ஆவது படமாக அது வந்ததால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்றனர். ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் ஒரு சதவீதத்தைக்கூட பூர்த்தி செய்யவில்லை. படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். சுறாவுக்கு முன்னதாகவே வில்லு உள்ளிட்ட படங்களும் அடி வாங்கியிருந்தாலும் சுறா விஜய்யை இரையாக்கிக்கொண்டது. மேலும், அந்தக் கதையில் விஜய் ஏன் நடித்தார் என்றே இன்றளவும் பலரால் கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

சீக்ரெட்டை உடைத்த மனோபாலா
இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான மனோபாலா சுறா படத்தில் விஜய் ஏன் நடித்தார் என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில், "ஏன் ப்பா விஜய் எதுக்கு ப்பா சுறா படத்துல நீ நடிச்ச என கேட்டேன். அதுக்கு விஜய் அத ஏன் அண்ணே கேக்குறீங்க,டேய் அவன ஏன் டா தண்ணில போட்டுட்டு வந்தீங்க அவன் சுறாடா அப்டினு இயக்குநர் சொன்னார் அதை நம்பி நடிச்சேன் அண்ணே என்றார். அதுக்கு நான் யப்பா அது கதை இல்லப்பா அது டயலாக் என சொன்னேன்" என்று கூறியிருக்கிறார். மனோபாலாவின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், டயலாக் கேட்டு ஒரு கதையை ஓகே பண்ணலாமா எனவும் ஒரு தரப்பினர் கேள்வி கேட்டுவருகின்றனர்.

சுறாவால் சுதாரித்த விஜய்
சுறா தோல்விக்கு பிறகு சுதாரித்துக்கொண்ட விஜய் அதனையடுத்து தேர்ந்தெடுத்த படங்கள் பெரும்பாலும் சிறப்பாகவே இருந்தன. அதிலும் துப்பாக்கி படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டை பெற்றுக்கொடுத்தது. தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் மாபெரும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அந்த இயக்குநர் கதை சொன்னதை நம்பித்தான் நான் சுறா படத்தில் நடித்தேன்


Click it and Unblock the Notifications











