Mari Selvaraj: 20 கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. காப்பாற்றுங்கள்! மாரி செல்வராஜ் வேண்டுகோள்
சென்னை: அடுத்தடுத்த படங்களை சிறப்பாக கொடுத்து வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
சமீபத்தில் அவரது இயக்கத்தில் மாமன்னன் படம் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது.

மாரி செல்வராஜின் இயக்கத்தில் வெளியாகிவரும் படங்கள் சமூக அக்கறையையும் வெளிப்படுத்தி வருகின்றன.
இயக்குநர் மாரி செல்வராஜ்: இயக்குநர் மாரி செல்வராஜின் பயணம் பரியேறும் பெருமாள் படத்தில் துவங்கியது தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, உதயநிதியின் மாமன்னன் படத்தையும் இயக்கி முடித்தார். இந்தப் படம் உதயநிதியின் இறுதிப்படமாக அமைந்தது. அதிகமான வரவேற்பை பெற்ற இந்தப்படத்தை தொடர்ந்து வாழை படத்தையும் இயக்கினார்.
சமூக அக்கறை: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக த்ருவ் விக்ரம் நடிப்பில் கபடியை மையமாக வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். தன்னுடைய படங்களில் சமூக அக்கறை அதிகமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வார் மாரி செல்வராஜ். அந்த வகையில் இவரது படங்கள் அதிரடியாக வெளியாகி ரசிகர்களை அவர்களுக்குள் இருக்கும் ஈரத்தை பதம் பார்த்து வருகின்றன. அந்த வகையில் இப்படியும் சிலரது வாழ்க்கை இந்த காலகட்டத்திலும் இருப்பதை சுட்டிக்காட்ட மாரி செல்வராஜ் மறப்பதில்லை.
தென் மாவட்டங்களில் வெள்ளம்: இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட பகுதிகளை பதம்பார்த்தது மிக்ஜாம் புயல். அதன் பாதிப்பிலிருந்து தமிழகம் மீண்ட நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது தன்னுடைய எக்ஸ் தளத்தில் சுட்டிக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். அங்கு ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
துண்டிக்கப்பட்ட தூத்துக்குடி: இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள் என்று சுட்டிக் காட்டியுள்ள அவர், தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கிராமங்களை சுற்றியுள்ள அனைத்து குளங்களும் உடைபட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீட்புப்பணிகளை துரிதப்படுத்த கோரிக்கை: ஸ்ரீவைகுண்டத்திற்கு கிழக்கே உள்ள ஆற்று பாசனத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களின் நிலையும் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மீட்பு வாகனங்கள், படகுகளால்கூட உள்ளே செல்ல முடியவில்லை என்றும் வெள்ளத்தின் வேகம் அப்படி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதன் வழியாவது மீட்புப்பணிகளை மிக துரிதமாக மேற்கொள்ளவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











