அந்த கேரக்டரை பார்த்து வருத்தப்பட்ட நெட்டிசன்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட திரௌபதி இயக்குநர்!
சென்னை: திரௌபதி படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவரை தவறாக காட்டியதாக வருத்தப்பட்ட நெட்டிசனிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் இயக்குநர் மோகன்.
Recommended Video
திரௌபதி படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. கிரவுட் ஃபன்டிங் முறையில் 50 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் முதல் மூன்று நாட்களிலேயே 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது.
கடந்த வாரம் ரிலீஸான படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் டாப்பில் இருப்பது திரௌபதி. இந்தப் படத்தில் குறிப்பிட்ட இரு சமூகம் சார்ந்த பிரச்சனைகள் காட்சியாக்கப்பட்டுள்ளது.

அரங்கம் நிறைந்த காட்சிகள்
குறிப்பாக நாடகக்காதல் சம்பவங்கள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு சில சமூகங்களை சேர்ந்தவர்களிடம் இருந்தும் சில அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் படம் பாராட்டை பெற்று வருகிறது. வட மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களில் படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

உண்மை சம்பவங்கள்
சமூக வலைதளங்களிலும் படத்தை பாராட்டியே கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்தும் படத்திற்கான வரவேற்பு குறித்தும் இயக்குநர் மோகன் ஜி தொடர்ந்து டிவிட்டி வருகிறார். படத்தை பாராட்டியவர்களுக்கு நன்றி கூறி வருகிறார் இயக்குநர் மோகன்.
நெருடலாக உள்ளது
இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை இயக்குநர் திரௌபதி படத்தில் வச்சு செய்திருப்பதாக வேதனை தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் டிவிட்டியிருப்பதாவது, ஒரு பிராமணரின் வருத்தம்.. திரௌபதி படத்தில் சிறு நெருடல்: மற்ற கதாபாத்திரங்களை எந்த இன அடையாளமும் இன்றி காட்டியுள்ள இயக்குனர் ஏனோ இந்த படுபாதக செயலை செய்யும் பதிவாளரை நீலநாராயணன் என்ற பெயரில் நெற்றியில் திருமண் இட்டுக்கொண்டும் வீட்டில் பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு பூஜை முடித்துவிட்டு லஞ்சம் வாங்குவதாக சித்தரித்து இருப்பது எம்மை போன்றோர்களுக்கு சற்று நெருடலாகத்தான் இருக்கிறது.
தாங்கி கொள்வார்கள்
ஒரு காலத்தில் இதுபோன்ற முக்கிய பதவிகளில் எல்லாம் பிராமணர்களாக இருந்தபோது எந்த சிறு தவறும் நடக்காமல் தான் இருந்தது. இன்று இது போன்ற பெரிய பதவிகளில் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோரும் நன்கு அறிந்ததே! அவ்வளவாக பிராமணர்கள் இல்லை என்பதே உண்மை நிலவரம்.பேசாமல் அவரையும் எந்த இன அடையாளமும் இன்றி ஒரு கதாபாத்திரமாகவே விட்டிருக்கலாம்.யார் எவ்வளவு அடித்தாலும் பிராமணர்கள் தாங்கி கொள்வார்கள் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
நீல நாராயணன்
திரௌபதி படத்தில் ரெஜிஸ்டரராக நீல நாராயணன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பவர் பணத்தை பெற்றுக்கொண்டு போலி பதிவு திருமணங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக காட்டப்பட்டிருக்கிறது. இதனை குறிப்பிட்ட அந்த நெட்டிசன், இயக்குநர் மோகனிடம் டிவிட்டர் வாயிலாக சாஃப்ட்டாகவே முறையிட்டிருக்கிறார்.
மன்னிப்பு..
அவரது இந்த டிவிட்டை பார்த்த படத்தின் இயக்குநர் மோகன், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள பதில் டிவிட்டில், இந்த திரைக்கதையில் நேர்மையாக, நெறியுடன் வாழும் எந்த சமூகத்தினர் மனம் புண்பட்டு இருந்தாலும் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.. நடந்த உண்மையை அப்படியே சொல்ல வந்த நோக்கம் மட்டுமே இந்த திரைக்கதை.. என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











