பஞ்சாமிர்தம் பற்றி சர்ச்சை கருத்து.. திரெளபதி பட இயக்குநர் மோகன் ஜி திடீர் கைது.. காரணம் என்ன?
சென்னை: திருப்பதி லட்டு குறித்த சர்ச்சை தொடர்பாகவும் நடிகர் விஜய்யின் அரசியல் ரொம்பவே தப்பாக இருக்கிறது என்றும் தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்த இயக்குநர் மோகன் ஜி அதிரடியாக கைது செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருப்பதி லட்டு விவகாரத்தின் எதிரொலியாக பழநி பஞ்சாமிர்தம் குறித்தும் சர்ச்சை கருத்தை மோகன் ஜி வெளியிட்டது தான் இந்த கைதுக்கு காரணமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், உரிய விளக்கத்தை காவல்துறையினர் கூறவில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் மோகன் ஜி: அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் ரிஷியை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி மற்றும் ருத்ர தாண்டவம் படங்களை இயக்கியவர் இயக்குநர் மோகன் ஜி. நாடக காதலை மையப்படுத்தி திரெளபதி படத்தை இயக்கி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியவர் தான் மோகன் ஜி. ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களுமே சர்ச்சையில் சிக்கின. பகாசூரன் படத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் நடித்திருந்தனர்.
கைதுக்கு என்ன காரணம்?: ”சினிமா இயக்குநர் நண்பர் திரௌபதி மோகன் G
@mohandreamer அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.

திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது.” என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பஞ்சாமிர்த சர்ச்சை: திருப்பதி லட்டு விவகாரம் சூடு பிடித்த நிலையில், அதற்கு ஏகப்பட்ட கருத்துக்களை மோகன் ஜி பதிவிட்டு வந்தார். அதை போல பஞ்சமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்துவதாக அவர் கருத்து ஒன்றை பதிவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுதான் அவரை கைது செய்ய காரணமா? என்கிற கேள்விகளையும் தற்போது எழுப்பியிருக்கிறது. ஆனால், மோகன் ஜி கைதுக்கான காரணம் இன்னமும் சரியாக தெரியவில்லை என்கின்றனர். விரைவில் இதுகுறித்த விளக்கத்தை காவல்துறை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











