Ponniyin Selvan 2 - பொன்னியின் செல்வன் திருப்தி இல்லையாம் - விமர்சனம் சொன்ன இயக்குநர்
சென்னை: Ponniyin selvan 2 (பொன்னியின் செல்வன் 2) பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் திருப்தி அளிக்கவில்லை என ரசிகர்கள் கூறிவரும் சூழலில் இயக்குநரும் அவ்வாறு கூறியிருக்கிறார்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உலக தமிழர்கள் அனைவரிடமும் எழுந்தது.

பொன்னியின் செல்வன் திரைப்படம்: ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாயை வசூலில் வாரி குவித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியானது, முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வெற்றிப்பெறும் என பொன்னியின் செல்வன் திரைப்பட ரசிகர்களும், படக்குழுவினரும் எதிர்பார்த்தார்கள்.அவர்கள் எதிர்பார்த்தபடியே படத்தை பார்க்க ரசிகர்க்ள் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு படை எடுத்தனர்.
வரலாறை மாற்றிய மணிரத்னம்?: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு ஓரளவு டீசண்ட்டான விமர்சனத்தையே கொடுத்துவந்தனர் ரசிகர்கள். ஆனால் படம் வெளியாகி சில நாள்கள் கழித்து ஆதித்ய கரிகாலன் (விக்ரம்) தற்கொலை செய்துகொண்டதுபோல் மணிரத்னம் காட்சியை வைத்தது மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியது. அதுமட்டுமின்றி சோழர்களின் வரலாறையே மணிரத்னம் மாற்றிவிட்டார் என்று நேரடியாகவே விமர்சனங்கள் வைத்தனர் சிலர்.
இயக்குரின் விமர்சனம்: இந்நிலையில் இயக்குநர் மோகன் ஜி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார். பொன்னியின் செல்வன் குறித்து பேசிய அவர், "பொன்னியின் செல்வன் முதல் பாகம் எனக்கு திருப்தி அளித்தது. இரண்டாம் பாகம் திருப்தி அளிக்கவில்லை. பொன்னியின் செல்வன் என்று பெயர் வைத்துவிட்டு அதுதொடர்பாக எதையும் காட்டவில்லை. படத்தின் மேக்கிங் நன்றாக இருக்கிறது. இருந்தும் கதையில் ஒன்றுமே இல்லை" என்றார்.

சர்ச்சை கிளப்பிய மோகன் ஜி: இதற்கிடையே மோகன் ஜி இதுவரை பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மோகன் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே பெரும் விமர்சனத்தை சந்தித்தவை. கடைசியாக அவர் இயக்கிய பகாசூரன் படம் பெண்களுக்கு நடக்கும் பிரச்னைக்ளுக்கு தொழில்நுட்பம்தான் காரணம் என்ற பார்வையில் அவர் படம் எடுத்திருந்ததாக விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











