கொரோனா வைரஸ் இப்படி எக்குத்தப்பா மிரட்டுதே... அந்த அறிவிப்பைத் தள்ளி வைத்த 'திரௌபதி' இயக்குனர்!
சென்னை: தனது அடுத்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை தள்ளி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார், திரௌபதி பட இயக்குனர்.
ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார், கருணாச், நிஷாந்த், ஜீவா ரவி உட்பட பலர் நடித்த படம், திரெளபதி. இதை மோகன் ஜி என்பவர் தயாரித்து இயக்கி இருந்தார்.
இவர் ஏற்கனவே 'பழைய வண்ணாரப் பேட்டை' என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் பிரஜின், அஸ்மிதா, ரிச்சர்ட் ரிஷி, கருணாஸ் உட்பட பலர் நடித்திருந்தார்.

குறைந்த பட்ஜெட்
பொலிட்டிக்கல் கிரைம் திரில்லர் படமான இது கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி, கவனிக்கப்பட்டது. இதையடுத்துதான் அவர் திரெளபதி படத்தை இயக்கினார். இந்தப் படத்துக்கு மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்தப் படம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ரிலீஸ் ஆனது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வரவேற்பை பெற்றது.
சரியான பதிலடி
நாடக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானார் மோகன் ஜி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மோகன் ஜி, தன்னை விமர்சிப்பவர்களுக்கு அதில் சரியான பதிலடி கொடுத்து வருகிறார். இதில் சில வார்த்தை மோதல்களும் நடந்தன.

அடுத்தப் பட டைட்டில்
இந்நிலையில் தனது அடுத்தப் படம் பற்றி கடந்த மாதம் அறிவித்திருந்தார். எனது அடுத்தப்படத்திலும் ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று ட்விட்டரில் கூறியிருந்தார். அடுத்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் ஒர்க்கிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தள்ளி வைப்பு
ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். தினசரி சம்பளம் வாங்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. வரும் 14 ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் தனது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பை தள்ளி வைத்துள்ளதாக, மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

நல்லதே நினைப்போம்
இதுபற்றி அவர் ட்விட்டரில் அறிவித்துள்ளார். 'எங்களின் அடுத்தப்பட தலைப்பை சித்திரை முதல் நாளில் வெளியிடும் ஆவலில் இருந்தேன். ஆனால் தற்போதைய சூழல் சரியில்லாத காரணத்தால் அறிவிப்பை சில காலம் தள்ளி வைத்துள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கவும். நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











