திருப்பதி லட்டு விவகாரம்.. அவா மேல ஏறலனா தூக்கமே வராதுல.. இந்துக்கள் இளிச்சவாயர்களா - மோகன் ஜி!
சென்னை: திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய் பயன்படுத்தியதாக ஆந்திராவின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். மேலும் இந்த கொழுப்பு கலப்படம் என்பது இதற்கு முன்னர் ஆந்திராவின் முதலமைச்சராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது எனக் கூறினார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே இந்த தகவலை தெரிவித்திருப்பது என்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தனது அதிருப்தியை கோபமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தென்னிந்தியாவில் இருக்கக் கூடிய கோவில்களில் அதிக பக்தர்கள் செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவிலுக்குத்தான். இந்த கோவிலுக்குச் சென்று வந்தால், வீட்டில் செல்வம் பெருகும் என பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. நன்கு மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற கோவில் என்றாலே, அந்த கோவிலுக்கென சிறப்பு பிரசாதம் என்பது கோவில் நிர்வாகத்தாலே வழங்கப்படும். அந்த வகையில், திருப்பதி எழுமலையான் கோவில் என்றால் லட்டு.

திருப்பதி லட்டு என்றாலே பக்தர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு என்பது எப்போது இருக்கும். கடவுள் மறுப்பாளர்கள் கூட திருப்பதி லட்டின் சுவை குறித்து பாராட்டுவார்கள் எனக் கூறும் அளவிற்கு பிரத்தி பெற்றது. இப்படியான திருப்பதி லட்டு உற்பத்தி முறையில் மாபெரும் முறைகேடு நடந்திருப்பது இப்போது வெளியே வந்துள்ளது. மேலும் இந்த முறைகேடு என்பது, பக்தர்களின் நம்பிக்கையை கேலிகூத்தாக்குவதைப் போல் உள்ளது.

சைவம்: குறிப்பாக திருப்பதி லட்டு தயாரிக்க நெய் பயன்படுத்துவார்கள். அப்படி இருக்கும்போது, விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யில் லட்டு தயாரித்திருக்கின்றார்கள் எனும்போது இது பக்தர்களுக்கு அதிர்ச்சி அளிக்கின்றது. காரணம், திருப்பதியில் உள்ள, வெங்கடாசலபதி, அசைவம் உண்ணாத வைணவக் கடவுள். அந்த கடவுளுக்கு படைக்கும் பிரசாதமும் அசைவம் அல்லாதவையாக இருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது, திருப்பதி பிரசாதமான லட்டில் விலங்குக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது பக்தர்களின் நம்பிக்கையை புண் படுத்தும் விதமாக உள்ளது.

மோகன் ஜி: இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கோபத்தையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக எக்ஸ் பக்கத்தில் ஒருவரின் பதிவை பகிர்ந்தும் உள்ளார். அதில், " எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள்" என ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகார திமிர்: ஏற்கனவே குறிப்பிட்டத்தைப் போல், எக்ஸ் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்த பதிவுக்கு கமெண்ட் செய்து, அதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தும் உள்ளார். அதில், " அவா மேல ஏறலனா தூக்கமே வராதுல.. இது அதிகார திமிர் பிடித்த அரசியல்வாதிகள் செய்த ஊழல், கலப்படம், தாக்குதல், அயோக்கியதனம்.. நீ சொல்ற அவா இதை சுத்தமா மக்களுக்கு கொடுக்கனும்னு வேலை செய்றவங்க.. இதுல Dr வேற" என மற்றொரு பதிவிலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











