இயக்குனர் முருகானந்தம் கதாநாயகனாக அறிமுகமாகும் “கபாலி டாக்கீஸ்“
சென்னை :'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "கபாலி " .
இயக்குனர் பாலாவின் தம்பி சந்திரமௌலி தனது மெளலி பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கி உள்ள படத்தின் பெயர் " கபாலி டாக்கீஸ் ".
இதில் கதையின் நாயகனாக முருகானந்தம் நடித்துள்ளார். இவர், விஷ்ணு விஷால் , கேத்தரின் தெரேசா, சூரி இவர்களுடன் கவுரவ வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளிவந்த " கதாநாயகன்" படத்தின் இயக்குனராவார்.

நகைச்சுவை நாயகனாக
இவர் " இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " "மரகத நாணயம்" படங்களில் காமெடியில் நடித்து கலக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் கதாநாயகியாக மேக்னா ஹெலன் மற்றும் கே.பாக்யராஜ், ஜி.எம்.குமார், இமான் அண்ணாச்சி, சார்லி, மதன் பாப், டான்சர் டியாங்கனா, பி.எல்.தேனப்பன். வேலு பிரபாகரன், வர்ஷன், நவீன், ராஜ்குமார், சக்ரி, ஷீலா, சாய்பிரியா இன்னும் பலர் நடித்துள்ளனர்.

மௌலி பிக்சர்ஸ்
ஜெயசீலன் - முனிகிருஷ்ணன் இருவரும் கலையையும், ராதிகா - சங்கர் இருவரும் நடன பயிற்சியையும், தவசி ராஜ் சண்டை பயிற்சியையும், சினேகன், மதுரகவி, தமிழ் இயலன், விஜயசாகர் நால்வரும் பாடல்களையும் எழுத, ராஜேஷ் கண்ணா படத்தொகுப்பையும் சபேஷ் - முரளி இரட்டையர் இசை அமைக்கின்றனர் , ஆர்.சுரேஷ்குமார் இணை தயாரிப்பில் மெளலி பிக்சர்ஸ் சார்பில் பி.சந்திரமெளலி தயாரித்துள்ளார்.

வெற்றி நிச்சயம்
கதை, வசனம், எழுதி ஒளிப்பதிவு செய்து ரவிசீனிவாசன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர்ஜி.எம்.குமார், வேலு பிரபாகரன் உட்பட முன்னனி இயக்குனர்களிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக பிடிக்கும்
படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள ரவி சீனிவாசன் படத்தை பற்றி கூறுகையில், " அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் முருகானந்தம். ஒரு கட்டத்தில் அண்ணன் இறந்து விடுகிறார். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு வலம் வந்த முருகானந்தத்திற்கு அண்ணனின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அதிலிருந்து மீண்டு தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் தடம் பதித்து சாதிக்க நினைக்கிறான்.

பெரிய இடி
பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதை சொல்லி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அலைகிறான். கிடைக்கவில்லை. இந்த நிலையில் முருகானந்தம் தன் பால்ய நண்பனை சந்திக்கிறான்.இவன் நிலை உணர்ந்து ' உனக்கு நானே வாய்ப்பு தருகிறேன் என்று கூறி முருகானந்தத்தை இயக்குனராக ஒப்பந்தம் செய்து நண்பனே படத்தை தயாரிக்கிறான். படம் முடிவடைந்தது. எந்த நண்பன் இவனுக்காக படத்தை தயாரித்தானோ அவன் மூலமே முருகானந்தத்திற்கு பேரிடி விழுந்தது.

ஜெயிப்பாரா நாயகன்?
அது என்ன? பல அதிர்ச்சிகளையும் , பேரிடர்களையும் சந்தித்து திரை உலக வாழ்க்கையிலும், நிஜ வாழ்க்கையிலும் முருகானந்தம் வென்றானா?" என்பதை வெகுஜனங்கள் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான பொழுது போக்கும் அம்சங்கள் நிறைந்த படமாக இயக்கி உள்ளேன். குறிப்பாக 1980ல் ஆரம்பிக்கும் கதை 2020 ல் முடியுமாறு திரைக்கதை அமைத்துள்ளேன். இந்தப் படம் முழுக்க முழுக்க சென்னையில் மந்தைவெளி மற்றும் மைலாப்பூர் பகுதிகளில் படமாக்கி உள்ளேன்.

மாறுபட்டது
அன்றைய சென்னை எப்படி இன்று உருமாறி உள்ளது என்பதனையும் அழகாக படம் பிடித்துள்ளேன். இதில் நிறைய சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் தான் காட்சிகள் அமைத்து இருக்கிறேன்.

பல ட்விஸ்டுகள்
சினிமாவை நேசித்து சுவாசிக்கும் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் சிறு வேடங்களில் நடித்துள்ள இயக்குனர் முருகானந்தத்தை கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தி உள்ளேன்" என்றார்"விரைவில் வெளிக்கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. மக்கள் தங்கள் கவலை மறந்து குடும்பத்தோடு ரசிக்கும் படமாக இருக்கும் " என்கிறார் தயாரிப்பாளர் பி.சந்திரமெளலி கூறியுள்ளார்.கண்டிப்பாக இது ஒரு வெற்றி படமாக அமையும் என்பதில் ஒரு துளியும் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications