Mysskin On Bala - பாலா இப்ப சரக்கு போடுறதில்ல - சர்ச்சையை கிளப்பிய இயக்குநர் மிஷ்கின்
சென்னை: Mysskin On Bala (பாலா குறித்து மிஷ்கின்) என் பாலா மீண்டும் வர வேண்டும் அவர் இப்போது சரக்கு போடுறதில்ல என இயக்குநர் மிஷ்கின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா. முதல் படத்தை காதல் கதையாக எடுத்தாலும் அதை அவர் உருவாக்கிய விதம் புதுமையாக இருந்ததால் படம் மெகா ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதில் பிதாமகன் படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

இளம் ஹீரோக்களை உருவாக்கிய பாலா: தொடர்ந்து அவர் இயக்கத்தில் நான் கடவுள் படம் உருவானது. அந்தப் படத்தில் முதல் அஜித் நடிக்க வேண்டியிருந்தது. சில பிரச்னைகளால் அஜித் வெளியேற ஆர்யா உள்ளே வந்தார். படம் வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து அவர் இயக்கிய அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றன. ஆனால் அந்த படங்களில் நடித்த ஹீரோக்கள் இன்று நல்ல நிலையில் இருப்பது கவனிக்கத்தக்கது.
பாலாவை சுற்றிய பிரச்னைகள்: சூழல் இப்படி இருக்க விக்ரம் மகன் துருவ்வை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அவரது உருவாக்கம் திருப்தி தராததால் அந்தப் படம் பரணில் வைக்கப்பட்டது. இது பாலாவுக்கு பெரும் கரும்புள்ளியாக கருதப்பட்டது. அந்தப் பிரச்னை ஓய்வதற்குள் பாலாவும் அவரது மனைவி மலரும் விவாகரத்து பெற்றனர். அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வணங்கானிலும் பிரச்னை: தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்துவந்த பாலாவுக்கு ஆசுவாசம் கிடைக்கும் விதமாக சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கும் சூழல் உருவானது. ஆனால் அந்தப் படத்திலிருந்து சூர்யா வெளியேறினார். இதனால் பாலாவை சுற்றி என்னதான் நடக்கிறது என அவரது ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இருப்பினும் சூர்யா, கீர்த்தி ஷெட்டி வெளியேறினாலும் அருண் விஜய்யை வைத்து இப்போது வணங்கான் படத்தை இயக்கிவருகிறார் பாலா.

மீண்டும் வர வேண்டும்: இந்நிலையில் இயக்குநர் பாலா குறித்து மிஷ்கின் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அருண் விஜய் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அப்போது அவர் பேசுகையில், "அருண் விஜய் நல்ல நடிகர். இப்போது பாலாவின் வணங்கானில் நடித்துவருகிறார். பாலா மகா கலைஞன். அவர் மீண்டும் வர வேண்டும். பாலா சரக்கு போடுறாரா என அருண் விஜய்யிடம் கேட்டேன். அவர் இல்லை என சொன்னார். அதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
இப்படியா பேசுவது: மிஷ்கினின் இந்த பேச்சு விவாதத்தை கிளப்பியுள்ளது. பாலாவை ஒரு மகா கலைஞன் என கூறும் மிஷ்கின், அந்த மகா கலைஞனின் தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசுவது அவரை அவமதிப்பது போல் இல்லையா என சிலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். மிஷ்கின் இயக்கத்தில் உருவான ,பிசாசு படத்தின் முதல் பாகத்தை இயக்குநர் பாலாதான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











